"உடனே நிறுத்துங்க.. அத்தனையும் விதிமீறல்..!" 2665 கட்டுமானங்களுக்கு பறந்த சென்னை மாநகராட்சி உத்தரவு!
சென்னை: தலைநகர் சென்னையில் விதிமுறைகளைப் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள் தொடர்பாகப் பெருநகர் சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
Recommended Video
இந்தியாவில் மிகவும் மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள நகரங்களில் ஒன்றாகச் சென்னை இருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகையைச் சமாளிக்க புதிய கட்டிடங்களும் கட்டப்பட்டு வருகிறது.
இதற்கான அனுமதியைச் சென்னை மாநகராட்சியின் நகரமைப்பு துறை வழங்கி வருகிறது. இருப்பினும், முறையான அனுமதி இல்லாமல் கட்டுமான பணிகள் நடப்பதாகப் புகார்கள் எழுந்தது.

பெருநகர சென்னை மாநகராட்சி
உரிய விதிகளைப் பின்பற்றாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டால் பெரும் ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. கடந்த 2014ஆம் ஆண்டு சென்னை மவுலிவாக்கத்தில் உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் கட்டப்பட்ட கட்டிடம் அப்படிச் சரிந்து விபத்திற்குள்ளான சம்பவம் அனைவருக்கும் நினைவில் இருக்கலாம். இந்நிலையில் விதிமுறைகளை மீறும் கட்டிடங்கள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அனுமதி வேண்டும்
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடியிருப்பு கட்டடங்களுக்குத் திட்ட அனுமதி மற்றும் கட்டிட அனுமதி மாநகராட்சியின் நகரமைப்பு துறையின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டிட அனுமதி மற்றும் திட்ட அனுமதி பெறுபவர்கள் அந்த அனுமதியில் குறிப்பிட்டுள்ளவாறு அளவு மற்றும் விவரக்குறிப்பின் அடிப்படையில் தான் கட்டடங்களைக் கட்ட வேண்டும்.

நோட்டீஸ்
அனுமதியில் குறிப்பிடப்படாத, விதிமுறைகளை மீற கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் கண்டறியப்பட்டு கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும். மேலும் தகுந்த விவரங்கள் மற்றும் போதிய ஆவணங்கள் இல்லாதபட்சத்தில் சம்பந்தப்பட்ட கட்டடத்தை மூடி சீல் வைக்க நோட்டீஸ் வழங்கப்பட்டு, குறிப்பிடப்பட்ட காலக்கெடுவிற்குப் பிறகு மாநகராட்சி அலுவலர்களால் மூடி சீல் வைக்கப்படும்

2665 கட்டுமான இடங்கள்
அதனடிப்படையில் 15 மண்டலங்களிலும் 25-07-2022 முதல் 20-08-2022 வரை சம்பந்தப்பட்ட உதவிப் பொறியாளர்களின் மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டத்தில் அனுமதிக்கு மாறாக விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டுள்ள மற்றும் கட்டட அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள 2665 கட்டுமான இடங்களின் உரிமையாளர்களுக்குக் கட்டுமான பணிகளை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

விதிமுறைகள்
கட்டுமான பணிகளை நிறுத்த நோட்டீஸ் வழங்கி குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விதி மீறல்களைத் திருத்திக் கொள்ளாத 2403 கட்டிட உரிமையாளர்களுக்கு சம்பந்தப்பட்ட கட்டுமான இடத்தை பூட்டி சீல் வைக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 39 கட்டடங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இதுபோன்று விதிமீறல் கட்டடங்கள் நாள்தோறும் மாநகராட்சி அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட திட்ட வரைபடத்தின்படி கட்டடங்களைக் கட்ட வேண்டும். விதிமுறைகளை மீறும் கட்டடங்கள் மீது மூடி சீல் வைப்பதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications