சென்னையில் 35% வரை தொழில் வரி உயர்வு.. மாநகராட்சியில் நிறைவேறிய தீர்மானம்.. அடுத்த அதிர்ச்சி
சென்னை: சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்படி தொழில்வரியை 35 சதவீதம் வரை உயர்த்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் தொழில் வரி அதிகரிக்கப்பட உள்ளது.
சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் இன்று நடந்தது. சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் இந்த கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் இறப்பிற்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன்பிறகு மாநகராட்சி கூட்டத்தின் நடவடிக்கைகள் தொடங்கியது. மொத்தம் 30க்கும் அதிகமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் மிகவும் முக்கியமானது என்னவென்றால் தொழில் வரி உயர்த்தும் தீர்மானமாகும். அதாவது சென்னை மாநகராட்சியில் தொழில் வரியை 35 சதவீதம் வரை உயர்த்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
அதாவது சென்னை மாநகராட்சியின் சட்ட விதிகள் படி ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஒருமுறை தொழில் வரி விகிதங்களை மாற்றி அமைக்கலாம். இந்த தொழில் வரி மாற்றம் செய்யும்போது குறைந்தபட்சம் 25 சதவீதத்துக்கும் குறையாமலும், அதிகபட்சமாக 35 சதவீதத்துக்கு மிகாமலும் தொழில் வரியில் மாற்றம் செய்ய வேண்டும்.
சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை கடந்த 2018 ம் ஆண்டு தொழில் வரி விகிதம் மாற்றி அமைக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு அதில் மாற்றம் செய்யப்படவில்லை. கடந்த 6 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தொழில் வரியை 35 சதவீதம் வரை அதிகரிக்க சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி மாத வருமானம் 21 ஆயிரம் ரூபாய்க்குள் உள்ள நபர்களுக்கான வரி விகிதத்தில் எந்த உயர்வும் செய்யப்படவில்லை.
மாறாக ரூ.21 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வருமானம் உள்ளவர்களுக்கான வரி என்பது ரூ.135 ல் இருந்து ரூ.180 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.45 ஆயிரம் வரை வருமானம் உள்வளர்களுக்கான தொழில் வரி என்பது ரூ.315ல் இருந்து ரூ.430 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ரூ.45 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கான தொழில் வரி என்பது ரூ.690ல் இருந்து ரூ930 ஆக உயர்த்த இந்த தீர்மானம் என்பது இடம் வழங்குகிறது. இந்த தொழில் வரியை மேற்கூறிய வருமானதாரர்கள் 6 மாதத்துக்கு ஒருமுறை செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொிழல் வரி விகிதத்ததை திருத்தம் செய்வது தொடர்பாக சென்னை மாநகராட்சியின் பரிந்துரைகளை அங்கீகரிக்க தமிழ்நாடு முழுவதும் ஒரே சீராக தொழில்வரி நிர்ணயம் செய்யும் வகையிலான முன்மொழிவினை தமிழக அரசுக்கு அனுப்பவும் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்துக்கு தமிழக அரசு அனுமதி கொடுக்கும்பட்சத்தில் தொழில் வரி உயர்வு என்பது நடைமுறைக்கு வரும்.












Click it and Unblock the Notifications