சென்னை மாநகராட்சியில் மீண்டும் சொத்து வரி உயர்வு? 6 சதவீதம் உயர்த்த தீர்மானம்!
சென்னை: சென்னை மாநகராட்சி சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்த மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் அது ஏற்கப்படவில்லை.
சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும் அது குறித்து ஏற்கப்படவில்லை.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி சொத்து வரி உயர்த்தப்பட்டது. சென்னையில் சொத்து வரி 50 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் சொத்து வரி உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சி உள்பட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரிகள் மூலம் வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாய் பல்வேறு திட்டங்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. சொத்து வரியை ஆண்டுதோறும் மாற்றியமைக்கலாம். அதன்படி அதிகபட்சமாக 6 சதவீதம் வரை சொத்து வரியை உயர்த்தலாம்.
கட்டடத்தின் அளவை பொருத்து சொத்து வரியில் வித்தியாசம் இருக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கே கடும் கண்டனங்கள் எழுந்தன. ஏற்கெனவே மின் கட்டணம், விலை வாசி எல்லாம் உயர்ந்து இருக்கும் நிலையில் சொத்து வரியை மீண்டும் உயர்த்த தீர்மானம் நிறைவேற்றியது ஏழை எளிய மக்களின் தலையில் பெரிய சுமையை வைப்பதாகும் என மாமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற மாநில அரசு சார்பில் இன்னும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் நிதி பற்றாக்குறையை சமாளிக்க வேண்டும். மழைக் காலம் தொடங்குவதற்குள் சாலை பணிகளை தொடங்கி முடிக்க வேண்டும். இதனால் வேறு வழியில்லாமல் சொத்து வரியை ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அது போல் இந்த கூட்டத்தில் மாநகரில் உள்ள 291 அம்மா உணவகங்களை ரூ 17 கோடியில் சீரமைக்கவும் 81 இடங்களில் ரூ 12 கோடியில் 3 டி மாடல் நவீன பேருந்து நிழற்குடைகள் அமைக்கவும் இன்றைய கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டட கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க விதிக்கப்படும் அபராதத்தை ரூ 500 லிருந்து ரூ 5000 ஆக உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அது போல் சென்னை தேனாம்பேட்டை மண்டலம் 110ஆவது வார்டில் காம்தார் நகர் மெயின் ரோடு பிரபல திரை இசை பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பெயரை சூட்டவும் இந்த மன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் சொத்து வரி உயர்வு உள்பட 68 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்னை மாநகராட்சியில் டபேதார் மாதவி லிப்ஸ்டிக் போட்டு வந்ததால் பணியிடமாற்றம் செய்யப்பட்டதாக எழுந்த சர்ச்சையில், பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், "அடுத்த கூட்டத்திற்கு நானும் லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு மாமன்றத்திற்கு வருவேன்" என சபதமிட்ட நிலையில் அவர் லிப்ஸ்டிக் போடாமலேயே இன்று மாமன்றக் கூட்டத்திற்கு வருகை தந்தார். இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது நான் இதையெல்லாம் போடுவதில்லை. இது ஒரு பிரச்சினையா, நாட்டில் எவ்வளவோ பிரச்சினை இருக்கு, அதை பார்ப்போம்" என தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications