அதிகாரிகள் வயிற்றில் புளியை கரைத்த சர்குலர்..அசம்பாவிதம் நடந்தா நீங்கதான் பொறுப்பு-கமிஷனர் வார்னிங்!
சென்னை : மழைநீர் வடிகால் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றால் சம்பந்தப்பட்ட பொறியாளர்களே பொறுப்பு என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அந்த சுற்றறிக்கையில், கட்டுமானம் தொடங்கி மழைநீர் வடிகாலில் நீர் முறையாக செல்வது வரை அனைத்தையும் உறுதி செய்ய செய்யவேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை மாநகராட்சியில் பல்வேறு திட்டங்களின் கீழ் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பொறியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரும் வழக்கு- ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு சென்னை கோர்ட் நோட்டீஸ்
நீங்களே பொறுப்பு
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் முதன்மை பொறியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், வேலைகள் தொடங்குவதற்கு முன்பாக லெவல் கட்டாயமாக எடுக்கப்பட்டு ஆலோசகர்களுடன் சரிபார்க்க வேண்டும். மழைநீர் வடிகால் கட்டிய பின்னர் முறையாக வடிகாலில் நீர் செல்லவில்லை என்றால் சம்பந்தப்பட்ட உதவி அல்லது முதன்மை பொறியாளர்களே பொறுப்பு.
முறையாக பின்பற்ற வேண்டும்
கட்டி முடிக்கப்பட்ட வடிகால்களில் தேவையான அளவிலான நீரை லாரிகள் மூலமாக நிரப்பி, நீர் தேங்காமல் சரியாக செல்வதை பொறியாளர்கள் சரிபார்க்க வேண்டும். உரிய விதிமுறைகளின்படி வடிகால்களின் கான்கிரீட் பணிகள் மேற்கொள்ளப்படுவதை தவறாமல் உறுதி செய்திட வேண்டும். முறையான தடுப்புகள் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் பணியை நிறைவேற்றும் போது பின்பற்ற வேண்டும்.
அசம்பாவிதம் நிகழ்ந்தால்
மேலும் வடிகாலின் அனைத்து நுழைவாயில்களுக்கும் சரியான சாய்வு மற்றும் கை தண்டவாள ஏற்பாடுகள் செய்யப்படுவது அவசியம். பாதுகாப்பு அம்சங்களின் குறைபாடு காரணமாக ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை செய்த பொறியாளர்களே பொறுப்பாவார்கள் என்று கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளை முடிக்கும் முன்பு
பணியை நிறைவு செய்வதற்கு முன்பு, TANGEDCO, CMWSSB, BSNL, OFC நிறுவனங்களுக்கு மண்டல அலுவலர் எழுத்துப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் அல்லது உரிய அதிகாரிகளின் தொடர்பு விவரங்கள் சேவைத் துறைகளுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.