கோர்ட்டில் வீடியோவை காட்டிய போலீஸ்! மெரினாவில் அத்துமீறிய சந்திரமோகன், தனலட்சுமி ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை: சென்னை மெரினா கடற்கரை அருகே நள்ளிரவில் காவல்துறையினரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சந்திரமோகன் மற்றும் தனலட்சுமி ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரை பகுதியில் லூப் சாலையில் நள்ளிரவில் நின்று கொண்டிருந்த காரை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் எடுக்குமாறு கூறியபோது, வேளச்சேரியை சேர்ந்த சந்திர மோகன் என்பவரும் அவரது தோழி தனலெட்சுமியும் காவல் துறையினரை ஆபாசமாக திட்டினர்.

இதையடுத்து, மயிலாப்பூர் காவல் நிலைய போலீஸ்காரர் அளித்த புகாரின் அடிப்படையில், மயிலாப்பூர் போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலட்சுமி ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், உட்பட 5 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட, சந்திரமோகன் மற்றும் தனலட்சுமி ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தன.
அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பவம் தொடர்பான வீடியோ காட்சியை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து சந்திரமோகன், தனலட்சுமி ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டார்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இருவருக்கும் ஜாமீன் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இருவரின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications