தமிழக பாஜகவின் ரைட் ஹேண்ட்.. ஐடி விங் தலைக்கு “செக்” -அக்டோபர் வழக்கு! நாளை விசாரணைக்கு ஆஜராக சம்மன்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்காக பசும்பொன் வருவதாகவும், ஆனால் அவருக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்றும் சமூக வலைதளத்தில் பதிவிட்ட பாஜக தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் சிடிஆர் நிர்மல்குமார் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி இருக்கிறார்கள்.
பாஜகவை சேர்ந்தவர் நிர்மல் குமார். தமிழ்நாடு பாஜகவில் துடிப்போடு செயல்பட்டு வரும் துறையாக பார்க்கப்படும் ஐடிவிங்கின் மாநில தலைவராக இவர் இருந்து வருகிறார்.
பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜகவின் தேசிய தலைவர்கள் தொடங்கி அண்ணாமலை, எல்.முருகன், வானதி சீனிவாசன் வரை பலரது கருத்துக்களையும் பாஜகவின் சமூக வலைதள பக்கங்களில் உடனுக்குடன் பகிர்ந்து வருகிறார்.

பாஜக ஐ.டி. விங்
எதிர்க்கட்சிகளின் மீதான விமர்சனங்கள், தமிழ்நாட்டு அரசு பற்றிய குற்றச்சாட்டுகளையும் உடனுக்குடன் பதிவிட்டு வரும் பாஜக ஐடி விங்க், மத்திய பாஜக அரசு மீதான குற்றச்சாட்டுகளுக்கும் விளக்கம் கொடுத்து வருகிறது. அதே போல் பாஜக ஐடி விங்கின் தலைவர் நிர்மல் குமாரும் சமூக வலைதள பக்கங்களில் தீவிரமாக இயங்கி வருகிறார்.

நிர்மல் குமார்
தமிழ்நாடு அரசு மற்றும் பாஜகவின் எதிர்க்கட்சிகள் மீது பல்வேறு விமர்சனங்களை இவர் முன்வைத்து வருகிறார். அதேபோல் சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டு பிரச்சனைகளின் மாட்டிக்கொள்வதும் இவரது வாடிக்கை. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்காக பசும்பொன் வருவதாகவும், ஆனால் அவருக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்றும் சமூக வலைதளத்தில் நிர்மல் குமார் பதிவிட்டதாக கூறப்படுகிறது.

விசாரணைக்கு அழைப்பு
இந்த நிலையில், சிடிஆர் நிர்மல் குமாரை விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி இருக்கின்றனர். சென்னை சைபர் கிரைம் போலீசார் கடந்த அக்டோபர் 14ம் தேதி பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் அவருக்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் அமைந்துள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் நாளை காலை 11 மணிக்கு அவர் ஆஜராக உத்தரவிடப்பட்டு உள்ளது.

ராகுல் காந்தி
இதேபோல் கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாடு பாஜக ஐடி விங் தலைவர் சிடிஆர் நிர்மல்குமார் ட்விட்டரில் ராகுல் காந்தி ஒரு சிறுமியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார். அத்துடன், "குழந்தைகளுடன் மருதாணி வைத்து விளையாடும் இந்த #pappu-வை கூட்டிக்கொண்டு யாத்திரை போகும் அந்த 10 பேரை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது.. " என்று குறிப்பிட்டு இருந்தார்.

சைபர் கிரைமில் புகார்
நிர்மல் குமார் வெளியிட்ட இந்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உள்ளிட்டோரும் இதனை கண்டித்திருந்தனர். இந்த நிலையில் நிர்மல் குமார் மீது டெல்லியை சேர்ந்த ஆதித்யா கோஸ்வாமி என்ற நபர் சைபர் கிரைமில் புகாரளித்துள்ளார்.

உசிலம்பட்டி டிஎஸ்பி
தனது மருமகளுடன் ராகுல் காந்தி இருந்த படத்தை தவறாக பதிவிட்டதாக அவர் தனது புகாரில் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆதித்யா கோஸ்வாமி, உசிலம்பட்டி டிஎஸ்பியிடம் இது தொடர்பாக தான் பேசியுள்ளதாக ட்விட்டரில் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த விவகாரம் அப்போது பெரும் பரபரப்பானது.












Click it and Unblock the Notifications