சென்னை 'நாய்க்கறி' விவகாரம்.. டெலிவரி ஏஜென்ட் அதிரடி கைது.. மீன் என்று புக் செய்யப்பட்டது அம்பலம்
Recommended Video
சென்னை: சர்ச்சைக்குரிய இறைச்சி சென்னை எழும்பூருக்கு கொண்டு வரப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றொருவரை தேடி வருவதாகவும், ரயில்வே பாதுகாப்பு படை எஸ்.பி. லூயிஸ் அமுதன் தெரிவித்தார்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு ஜோத்பூரிலிருந்து வந்த 2000 கிலோ அளவுக்கான இறைச்சி, நாய்க்கறி என்று சர்ச்சை எழுந்தது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அவற்றை அழித்துவிட்டனர்.
இதனிடையே அது ஆட்டிறைச்சி, என்றும் அது தங்களுக்கு சொந்தமானது என்றும் ஷகிலா பானு என்ற பெண் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அது நாய்கறியே கிடையாது வெள்ளாட்டுக் கறி.. குவியும் ஆதாரங்கள்.. விடை கிடைக்குமா?
டெலிவரி ஏஜென்ட்
குழப்பம் நிலவும் சூழ்நிலையில், ரயில்வே பாதுகாப்பு படை எஸ்.பி.லூயிஸ் அமுதன், இன்று மதியம், நிருபர்களிடம் கூறியதாவது: ரயில்வே பாதுகாப்பு சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டெலிவரி ஏஜென்ட் ஜெய்சங்கர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு ஏஜென்ட் கணேசன் என்பவரை தேடி வருகிறோம். மேலும் இதை அனுப்பியவரை கண்டுபிடிப்பதற்காக சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை ஜோத்பூர் செல்ல உள்ளது.
போலீஸ் கண்காணிப்பு
ரயிலில் வரக்கூடிய இறைச்சிகளை, கண்காணிப்பது உணவு பாதுகாப்பு மற்றும் தமிழக உணவு பாதுகாப்பு அமைப்பு ஆகியவைதான். இறைச்சி உண்ண முடியாததா, உண்ணத்தக்கதா என்பதை அவர்கள்தான் தீர்மானிப்பார்கள். வேறு ஏதாவது ஒரு பெயரை குறிப்பிட்டுவிட்டு, இறைச்சி அனுப்பப்படுவது தொடர்பாக போலீசாரும் இனிமேல் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.
சோதித்து பார்த்திருக்க வேண்டும்
பார்சலை அனுப்பும்போது எங்கே இருந்து அந்த பார்சல் வருகிறதோ அங்கு உள்ள பார்சல் அதிகாரிகள் அதை சோதனை செய்து அனுப்பி இருக்க வேண்டும். ஜோத்பூரில் இது ஏன் சோதித்து பார்க்கபடவில்லை என்பது குறித்து விசாரிக்கப்படும். நாய் இறைச்சியா, ஆட்டுக் கறியா என்பதை உணவு பாதுகாப்பு அமைப்பு தான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் தான் சோதித்து முடிவை அறிவிப்பார்கள். காவல்துறை எதையும் சொல்ல முடியாது.
எளிதான சட்ட பிரிவு
தவறான பெயரில் உணவுப் பொருட்களை அனுப்பியது தொடர்பான சட்டப் பிரிவில் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஜாமீனில் வெளிவரக்கூடிய சட்டப்பிரிவு தான். ஆட்டு இறைச்சியா அல்லது நாய்க்கறியா என்பது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. சந்தேகத்திற்கிடமாக இறைச்சி வந்துள்ளது என்பது மட்டும்தான் காவல் துறைக்கு கிடைத்த தகவல். என்ன இறைச்சி என்பதை உணவு பாதுகாப்பு அமைப்பு தான் முடிவு செய்ய வேண்டும். எனவே இதுதொடர்பாக பெண்மணி அளித்த பேட்டி குறித்து எங்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் கிடையாது.
மீன் என்று புக்கிங்
உணவு டெலிவரி ஏஜென்ட் எத்தனை ஆண்டுகளாக இந்த தொழிலில் இருக்கிறார் என்பது தொடர்பாகவும், விசாரணை நடந்து வருகிறது. விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் முழு அளவிலான விசாரணைக்கு பிறகு அந்த தகவல்களை தெரிவிக்கிறோம். மீன் என்றுதான் புக் செய்து ரயிலில் அனுப்பி வைத்துள்ளனர். இவ்வாறு பொய் சொல்லி புக் செய்தது யார் என்பதை ஜோத்பூர் சென்ற பிறகு போலீசார் உறுதி செய்வார்கள். இவ்வாறு ரயில்வே பாதுகாப்பு படை எஸ்.பி. லூயிஸ் அமுதன் தெரிவித்தார்.