ஈசிஆர் சாலை டூ நீலாங்கரை.. சென்னை பாலவாக்கத்தில் பார்த்தீங்களா.. சுழலும் ஆபீசர்ஸ்.. வாவ் தமிழக அரசு
சென்னை: சென்னையின் ஈசிஆர், நீலாங்கரை, பாலவாக்கம், கொட்டிவாக்கம் பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.. இதற்கான பணிகளை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது.
திமுக இந்த முறை ஆட்சிப்பொறுப்பேற்றதுமே, சிங்கார சென்னை திட்டத்தில் கூடுதல் கவனத்தை செலுத்தி வருகிறது.. இது முதல்வர் ஸ்டாலினின் கனவுத்திட்டமாகவும் உள்ளது. அதனால்தான், பட்ஜெட் அறிவிப்புகளில்கூட, சிங்கார சென்னைக்கு பிரத்யேகமான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

சிங்கார சென்னை: எனவே, பூங்காங்கள், பாலங்கள், சாலைகள், என பல்வேறு விஷயங்களில் அதிக அக்கறையை செலுத்தி வருகிறது. அந்தவகையில், சென்னையின் முக்கிய சாலைகளிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன..
சாலைகள்: ஏற்கனவே, இருந்த பகுதிகளை, சீரமைத்து, புனரமைத்து வருவது ஒருபுறமும், சாலைகளை அகலமாக்குவது, புதிய அலங்கார அமைப்புகளை உருவாக்குவது போன்ற பணிகள் நடந்து வருகின்றன. இனி நிறைய பாலங்களும் திறப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக சொல்கிறார்கள்..
இப்படிப்பட்ட சூழலில், சென்னை குடிநீர் வாரியம் சார்பில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை பகுதிகளுக்கான பாதாள சாக்கடை திட்டம் ரூ.418.20 கோடியிலும், நீலாங்கரையில் குடிநீர் வழங்கல் திட்டம் ரூ.77.03 கோடியிலும் மேற்கொள்ளப்பட உள்ளன.
அடிக்கல்: இந்த திட்டப் பணிகளுக்கான தொடக்க விழா நீலாங்கரையில் நடந்துள்ளது.. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விழாவில் பங்கேற்றனர். திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி அமைச்சர் நேரு பேசியதாவது:
பாதாள சாக்கடை திட்டத்தின்கீழ், 17 கழிவுநீர் உந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு 139.54 கி.மீ. நீளத்துக்கு பிரதான குழாய்கள் பதிக்கப்படும். 24.66 கி.மீ. நீளத்துக்கு உந்து குழாய்கள் பதிக்கப்பட்டு, 1,633 இயந்திர நுழைவு வாயில்கள் அமைக்கப்படும்.
கொட்டிவாக்கம்: இத்திட்டம் மூலம் கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை பகுதிகளில் உள்ள 12,776 குடியிருப்புகளுக்கு கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்படும். இதனால் 1.04 லட்சம் பேர் பயன் பெறுவார்கள். நீலாங்கரை பகுதிக்கான குடிநீர் வழங்கல் திட்டத்தின்கீழ் 51.651 கி.மீ. நீளத்துக்கு குடிநீர் பகிர்மான குழாய்கள் பதிக்கப்படும்.
525 மீட்டர் நீளத்துக்கு உந்துகுழாய்கள் பதிக்கப்பட்டு 22 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும், 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியும் அமைக்கப்படும். இத்திட்டம் மூலம் அப்பகுதியில் உள்ள 4,986 குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும். இதன்மூலம் 42,206 பேர் பயன்பெறுவார்கள்" என்றார்.

மகிழ்ச்சி: ஆக, ஈசிஆர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் வசிப்பவர்களுக்கு குழாய் மூலம், குடிநீர் வினியோகம் மற்றும் கழிவு நீர் குழாய் வலையமைப்பு ஆகியவை வரும் 2026ம் ஆண்டுக்குள் அமைக்கப்படும் என்ற தகவலால் அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.












Click it and Unblock the Notifications