சென்னை மக்களின் கவனத்திற்கு! எழும்பூர் ரயில் நிலையம் மறுசீரமைப்பு.. புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து
சென்னை: எழும்பூர் ரயில் நிலையம் சீரமைக்கப்பட்டு வருவதால், புறநகர் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே புறநகர் மின்சார ரயில் பயணிகள் மாற்று பயண ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக 10 மற்றும் 11வது நடைமேடைகளில் வழக்கமாக இயக்கப்படக்கூடிய புறநகர் மின்சார ரயில்கள் இன்று முதல் 18ஆம் தேதி வரை, இரவு 9 மணி தொடங்கி அதிகாலை 5 மணி வரை 8 மணி நேரத்திற்கு 5 மற்றும் 6வது நடைமேடைகளில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதில் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்கு செல்லும் புறநகர் மின்சார ரயில்கள் 6வது நடைமேடையிலும் மறு மார்க்கமாக செல்லும் புறநகர் மின்சார ரயில்கள் 5வது நடைமேடையில் இருந்தும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. அதேபோல சில மின்சார ரயில் சேவைகள் பகுதி நேரமாகவும் முழுவதுமாகவும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
ரத்து செய்யப்பட்ட மின்சார ரயில்களின் விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, இன்று தொடங்கி 18ம் தேதி வரை சென்னை கடற்கரையில் இருந்து இரவு 8:55 மணிக்கு, 10:20 மணிக்கு மற்றும் 11:30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
அதேபோல கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 9:05க்கு, 10:10க்கு, 11:15 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை நோக்கி செல்லும் புறநகர் ரயில்கள் தாம்பரம்- சென்னை கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
அதேபோல இன்று மற்றும் 15ம் தேதிகளில் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 9:30 மணிக்கு, 10 மணிக்கு மற்றும் 11:40 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரயில்களும், தாம்பரத்திலிருந்து இரவு 10 மணி, 11 மணி, மற்றும் 11:40 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை நோக்கி வரும் மின்சார ரயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications