ஆன்லைன் டிரேடிங்கில் பணத்தை இழந்த சென்னை என்ஜினியர்.. கடைசியில் வழிபறி திருடனாகி.. நடந்த அசிங்கம்
சென்னை: ஆன்லைன் டிரேடிங்கில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசைப்பட்டு, மொத்த பணத்தையும் இழந்த இளைஞர், கடனை அடைக்க கடைசியில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு கைதாகி உள்ளார். வரும் ஜூன் 10-ந்தேதி தங்கையின் திருமணம் நடக்க இருந்த நிலையில், சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட சிவில் இன்ஜினியரான அந்த இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை தாம்பரம் சேலையூரில் உள்ள காமராஜபுரம், நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி (வயது 70). இவரிடம் 2 பவுன் சங்கிலியும், கிழக்கு தாம்பரம், ஆஞ்சநேயர் தெருவில் நித்திய சுபா (49) என்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியையும் மோட்டார்சைக்கிளில் வந்த இளைஞர் அண்மையில் பறித்து சென்றுவிட்டார்.

இந்த சம்பவங்கள் குறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும், சங்கிலி பறிப்பு கொள்ளையன் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தார்கள்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் 2 பெண்களிடமும் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது கோவில்பட்டியை சேர்ந்த 27 வயதாகும் அருணாச்சலம் என்பதும், தற்போது சென்னையை அடுத்த மடிப்பாக்கம், ராம் நகர் பகுதியில் குடும்பத்துடன் சொந்த வீட்டில் வசித்து வருவதும் தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து மேலும் விசாரித்தனர்.
சிவில் என்ஜினீயரிங் படித்து முடித்த அருணாச்சலத்திற்கு சரியான வேலை கிடைக்கவில்லையாம். இதனால் ஆன்லைன் டிரேடிங்கில் கவனம் செலுத்தி பணம் சம்பாதிக்க விரும்பினார். ஆனால் அதில் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது. எப்படிப்பட்ட நஷ்டம் என்றால். தனது தங்கையின் திருமணத்துக்கு வைத்திருந்த நகை மற்றும் பலரிடம் கடன் வாங்கியது என சுமார் 15 லட்சம் ரூபாய் வரை ஆன்லைன் டிரேடிங்கில் இழந்திருக்கிறார.
ஆன்லைன் டிரேடிங் காரணமாக சம்பாதித்த மற்றும் சேமித்த பணத்தை இழந்து பெரும் கடனாளியான அருணாச்சலம், சரியான வேலை இல்லாததால் கடனை திருப்பி செலுத்த பணம் இல்லாமல் பரிதவித்துள்ளார். இதனால் என்ன செய்வது என்று யோசித்த அருணாச்சலம் 'யூடியூப்' பார்த்து சங்கிலி பறிப்பில் ஈடுபடலாம் என்று விபரீத முடிவு செய்தார். அதன்படியே தனியாக செல்பவர்களை நோட்டமிட்டு சீதாலட்சுமி, நித்திய சுபா ஆகிய இருவரிடமும் அருணாச்சலம் சங்கிலி பறித்ததும் தெரிந்தது.
அதில் 5 பவுன் நகையை தங்கையின் திருமணத்துக்காக வீட்டில் கொடுத்துள்ளார். மீதமுள்ள 2 பவுன் நகையை அடகு வைத்து பணம் பெற்றதும் விசாரணையில் வருகிற 10-ந் தேதி தங்கைக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. கைதான அருணாச்சலம் சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications