444 கிமீ.. களமிறக்கப்படும் ரூ.2.5 லட்சம்.. ஸ்டாலின் போட்ட கையெழுத்து.. சென்னையின் அடித்தளமே மாறுது!
சென்னை: சென்னை பெருநகரப் பகுதிக்கான ரூ. 2.5 லட்சம் கோடி மதிப்பிலான விரிவான போக்குவரத்துத் திட்டத்திற்கு (CMP) தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தத் திட்டம், சென்னையின் போக்குவரத்து திட்டங்களை விரிவுபடுத்துவதற்கும், ஒருங்கிணைப்பதற்கும் 25 ஆண்டு கால செயல் திட்டத்தை வகுத்துள்ளது. அதாவது சென்னையில் பேருந்து, ரயில் மற்றும் மெட்ரோ திட்டத்தை விரிவு செய்வதற்கான மாஸ்டர் பிளான் வகுக்கப்பட்டது.
நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையத்தின் (CUMTA) இரண்டாவது கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. இந்த CMP திட்டத்தின்படி, சென்னை மெட்ரோவின் தற்போதைய 172 கி.மீ. தூர மெட்ரோ ரூட், 2048-ம் ஆண்டுக்குள் 444 கி.மீ. ஆக விரிவுபடுத்தப்படும்.

444 கிமீ தூரத்திற்கு விரிவாக்கப்படும் மெட்ரோ
இதில் தற்போது நடைபெற்று வரும் 54 கி.மீ. முதல் கட்டப் பணிகளும், 118 கி.மீ. இரண்டாம் கட்டப் பணிகளும் அடங்கும். கூடுதலாக, 152 கி.மீ. நீளத்திற்கு மெட்ரோ லைட் ரயில் வலைப்பின்னல் அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
புறநகர் ரயில் சேவை மேம்பாட்டிற்காக, 182 கி.மீ. தூரத்திற்கு புதிய வழித்தடங்களும், தற்போதுள்ள 126 கி.மீ. தூர வழித்தடங்களை நவீனப்படுத்துவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படும். இதுதவிர, 438 கி.மீ. தூரத்திற்கு பேருந்து விரைவுப் போக்குவரத்து அமைப்பு (BRTS) வலைப்பின்னலும் உருவாக்கப்படும். இந்த BRTS திட்டத்தில் ஆலந்தூர்/தாம்பரம் முதல் பரந்தூர் வரையிலும், காஞ்சிபுரம் முதல் செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரி/கடலூர் வரையிலும், சென்னை சென்ட்ரல் முதல் கும்மிடிப்பூண்டி, ஸ்ரீ சிட்டி மற்றும் நெல்லூர் வரையிலும் முக்கிய இணைப்புகள் உருவாக்கப்படும்.
3 வகையான திட்டம்
CMP திட்டம், பணிகளை குறுகியகால, மத்தியகால, மற்றும் நீண்டகாலப் பிரிவுகளாகப் பிரித்துள்ளது. 2030-க்குள் நிறைவு செய்யப்பட வேண்டிய பணிகளுக்காக ரூ. 75,976 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான நிதி பொதுப் போக்குவரத்து விரிவாக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும். அதைத் தொடர்ந்து, 2040-ம் ஆண்டு வரையிலான திட்டங்களுக்கு ரூ. 95,777 கோடியும், இறுதி கட்டமான 2048-ம் ஆண்டு வரையிலான முதலீடுகளுக்கு ரூ. 40,768 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) 2018-ல் தயாரித்த CMP திட்டம், 1,189 சதுர கி.மீ. பரப்பளவை உள்ளடக்கியது. ஆனால், 2022-ல் சென்னை பெருநகரப் பகுதி 5,904 சதுர கி.மீ. ஆக விரிவுபடுத்தப்பட்டதால், இந்தத் திட்டம் புதுப்பிக்கப்பட்டது. இந்த புதிய திட்டத்தை ஒருங்கிணைத்து கண்காணிக்க CUMTA அமைப்புக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது
இந்தத் திட்டம், நீடித்த போக்குவரத்து கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. இது வாகனங்களை விட மனிதர்களின் இயக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கிறது. பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துதல் மற்றும் பல போக்குவரத்து ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கிறது. மேலும், தனிப்பட்ட வாகனங்களின் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலமும், நடப்பதையும், மிதிவண்டிப் பயணத்தையும் ஊக்குவிப்பதன் மூலமும், நகர வளர்ச்சியை மேம்படுத்துவதன் மூலமும், காற்று மாசுபாட்டைக் குறைத்து, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இத்திட்டம் முயல்கிறது.
அதாவது சென்னையில் பொதுப்போக்குவரத்து வரும் காலங்களில் அதிகரிக்கும். அதற்கு பதிலாக கார், பைக் பயணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது போக நடைப்பயணம், மிதிவண்டி பயணத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications