“அட்டாக்”.. 6 முறை நின்ற இதயம்! போன ஆசிரியர் உயிரை மீட்ட அரசு மருத்துவர்கள்! உலகளவில் அரிய நிகழ்வாம்
தனியார் மருத்துவமனைகளை மக்கள் நாடி செல்லும் நிலையில் அரசு மருத்துவர்களின் இந்த செயல் பாராட்டை பெற்றுள்ளது.
சென்னை: 6 முறை இதயத்துடிப்பு நின்ற அரசு பள்ளி ஆசிரியரை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராடி காப்பாற்றி இருக்கிறார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி கனகராஜ் தெரிவித்து இருக்கிறார். தனியார் மருத்துவமனைகளை மக்கள் நாடி செல்லும் நிலையில் அரசு மருத்துவர்களின் இந்த செயல் பாராட்டை பெற்றுள்ளது.
இதுகுறித்து பேஸ்புக்கில் பதிவிட்டு இருக்கும் அவர், "அதிசயம்தான்.. ஆனால் உண்மைதான். அரசு மருத்துவமனைதான்! 6 முறை இதய துடிப்பு நின்ற நிலையில் தீவிர சிகிச்சையின் முயற்சியால் ஆசிரியர் ஒருவரை மீண்டும் உயிர் பிழைக்க வைத்துள்ளனர், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை டாக்டர்கள்.
சென்னை சைதாப்பேட்டை மாநகராட்சி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ராஜேஷ் என்பவருக்கு கடந்த 28 ஆம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது. உடனே, சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி செய்யப்பட்டது.

இதய சிகிச்சை
பின்னர் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதய சிகிச்சை நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து, சிபிஆர் மற்றும் ஷாக் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து இதய துடிப்பு சீரானது. ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதே இதய துடிப்பு நின்று விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ரத்த குழாயில் அடைப்பு
இந்த நிலையில், இதய துடிப்பு சீரானது மருத்துவர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும், இதய ரத்த குழாயில் அடைப்பு இருந்தது பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி ரத்தக் குழாயில் இருந்த அடைப்பு சீர்செய்யப்பட்டது.

30 நிமிடங்கள் சிபிஆர்
ஆஞ்சியோ பிளாஸ்டு சிகிச்சை செய்யப்படுவதன் மூலம் இதயத் துடிப்பு சீராகும் என்று மருத்துவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மீண்டும் இதயத்துடிப்பு நின்று போனது. இதையடுத்து 30 நிமிடங்களுக்கு சி.பி.ஆர். செய்து இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் மருந்துகள் செலுத்தப்பட்டன.

6 முறை நின்ற இதயதுடிப்பு
பிறகு அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. செயற்கை சுவாசத்தில் இருந்த அவர் படிப்படியாக மீண்டு வந்தார். படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு நடக்கவும், சாப்பிடவும் ஆரம்பித்தார். இதுகுறித்து ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் கூறுகையில், ''இதயத் துடிப்பு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் நின்றுவிட்டால் உயிரிழப்பு ஏற்படும். ஆனால் இவருக்கு 6 முறை இதயத்துடிப்பு நின்றுவிட்டது.

அரிதான நிகழ்வு
அதில் ஒரு மணி நேரத்தில் 5 முறை இதயத் துடிப்பு இல்லாமல் போனது. மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் இயல்பு நிலைக்கு அவர் திரும்பினார். இறுதிக்கட்டம் வரை மருத்துவர்கள் அவரது உயிரை காப்பாற்ற போராடினர். இதன் காரணமாக, அவரது இதயத் துடிப்பு படிப்படியாக சீராகி முன்னேற்றம் ஏற்பட்டது. இது மருத்துவத்துறையில் மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்று நிகழ்வது அரிதான ஒன்று.'' என்றார்.












Click it and Unblock the Notifications