கிண்டி மருத்துவமனையில் டாக்டர் பாலாஜியை இளைஞர் கத்தியால் தாக்கிய சம்பவம்.. எப்ஐஆரில் பரபரப்பு தகவல்
சென்னை: சென்னை கிண்டி அரசு மருத்துவமனை டாக்டர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட வழக்கில் விக்னேஷ்வரன் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், பாலாஜியின் அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது என்றும் கொலை நோக்கத்துடன் பாலாஜி தப்பிவிடாமல் இருக்க தலை, இடது கழுத்து, இடது காது மடல், தோள்பட்டையில் வெட்டினார் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் புற்றுநோயாளிகள் பிரிவில் டாக்டர் பாலாஜி என்பவர் பணிபுரிந்து வந்தார். அவர் வழக்கம் போல் நேற்று பணியில் இருந்தார். அப்போது தனது தாய்க்கு சரியாக சிகிச்சை வழங்கவில்லை என்று கூறி நேற்று டாக்டர் பாலாஜியை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் அவருக்கு 7 இடங்களில் வெட்டு விழுந்தது.

அரசு மருத்துவமனைக்குள் புகுந்து டாக்டர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மருத்துவர் பாலாஜியுடன் இருந்த பேராசிரியர் சேதுராமன் கொடுத்த புகாரின் பேரில் விக்னேஷ்வரன் மீது சென்னை கிண்டி போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். தற்போது விக்னேஷ் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்த சம்பவத்தின் முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:- பேராசிரியர் சேதுராமன் அளித்த புகாரில், எனது அறைக்கு எதிரில் தான் மருத்துவர் பாலாஜியின் அறை உள்ளது. திடீரென அந்த அறையில் இருந்து சத்தம் கேட்டது. என்ன என்று நானும், இன்னொரு மருத்துவரும் பார்த்தோம். அப்போது அவரது அறை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. ஜன்னல் வழியாக நாங்க என்ன சத்தம் இப்படி கேட்கிறது என்று பார்த்தோம். அப்போது அந்த வாலிபர் டாக்டர் பாலாஜியிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்.
திடீரென பாலாஜியை அடித்து, பின்பு கத்தியால் தாக்கினார். கொலை நோக்கத்துடன் பாலாஜி தப்பிவிடாமல் இருக்க தலை, இடது கழுத்து, இடது காது மடல், தோள்பட்டையில் வெட்டினார். அப்போது விக்னேஷ் எங்களை பார்த்து, என் அம்மாவுக்கு சரியான சிகிச்சை அளிக்காததன் காரணமாக டாக்டர் பாலாஜியை வெட்டி கொலை செய்ய வந்தேன். அவர் இனிமேல் பிழைக்க மாட்டார் என்றார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விக்னேஷ் இதேபோன்று சம்பவத்தில் ஏற்கனவே ஈடுபட்டாரா? இவருக்கு கத்தி எப்படி கிடைத்தது? எப்படி உள்ளே வந்தாரா? இவருக்கு யாரும் உதவி செய்தனரா? யாருடைய தூண்டுதலின் பேரில் இதனை செய்தாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விக்னேஷ்வரனிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications