லைகா நிறுவனத்திற்கு எதிராக நடிகர் விஷால் வழக்கு! சென்னை ஹைகோர்ட் பரபரப்பு உத்தரவு
சென்னை: ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை தனக்கு செலுத்த லைகா நிறுவனத்திற்கு உத்தரவிடக் கோரி நடிகர் விஷால் தாக்கல் செய்த வழக்கில் சமரசம் ஏற்பட்டதால் வழக்கை முடித்துவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் தாக்கல் செய்த மனுவில், விஷால் பிலிம் பேக்டரி பட நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான சண்டக்கோழி-2 திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்க மற்றும் சாட்டிலைட் வெளியீடு உரிமைக்காக லைகா நிறுவனத்துடன் கடந்த 2018ம் ஆண்டு 23 கோடியே 21 லட்சத்திற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி படம் வெளியிடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அதற்கான 12 சதவீத ஜிஎஸ்டி தொகையை லைகா பட நிறுவனம் செலுத்தாததால், அபராத தொகையுடன் சேர்த்து 4 கோடியே 88 லட்ச ரூபாயை தான் செலுத்தி உள்ளதாக விஷால் கூறியுள்ளார்.
மேலும் லைகா நிறுவனம் ஒரு வெளிநாட்டு நிறுவனம் என்பதால் நிறுவனத்தை மூடிவிட்டு தயாரிப்பாளர் வெளிநாட்டிற்கு தப்பி செல்வதற்கும் வாய்ப்பிருப்பதால், தான் செலுத்திய ஜிஎஸ்டி தொகை மற்றும் அபராதத் தொகையை, வட்டியுடன் சேர்த்து 5 கோடியே 24 லட்சத்து 10 ஆயிரத்து 423 ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் இந்த வழக்கை மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பக் கோரி லைகா நிறுவனம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன்,
வழக்கை மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,
இரு தரப்பிலும் சமரசம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, வழக்கை முடித்துவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications