அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
சென்னை : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான தேர்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
2016ல் திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணனின் வெற்றியை எதிர்த்து ராம்குமார் ஆதித்தன் வழக்கு தொடர்ந்தார்.
5 ஆண்டுகால பதவி காலம் முடிந்துவிட்டதால் வழக்கை தொடர்ந்து நடத்த எந்தவித முகாந்திரமும் இல்லை எனத் தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

2016 தேர்தல்
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன் சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட நடிகர் சரத்குமார் தோல்வியடைந்தார். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் தேர்தல் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

வெற்றியை எதிர்த்து வழக்கு
அந்த வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன் தனது வேட்பு மனுவில் பல்வேறு தகவல்களை மறைத்துள்ளதாகவும் அவரது வேட்புமனுவில் 16 குறைபாடுகள் உள்ளதாகவும், குறைபாடுகள் உள்ள வேட்புமனுவை தேர்தல் அதிகாரி ஏற்றது சட்ட விரோதமானது எனவே அவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார்.

அனிதா ராதாகிருஷ்ணன் மனு
2021 தேர்தலில் அதே திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்று தற்போது அமைச்சராகவும் பணியாற்றி வருகிறார் அனிதா ராதாகிருஷ்ணன். இந்த வழக்கு 6 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 2021ல், பதவிக் காலம் முடிந்ததால், இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

தள்ளுபடி
இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார் இன்று
தீர்ப்பளித்துள்ளார். அவரது தீர்ப்பில், 2016-2021 ஐந்தாண்டு பதவிக் காலம் முடிந்துவிட்டது. அதனால் தொடர்ந்து வழக்கை நடத்த எந்த முகாந்திரமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications