ராஜகோபாலன் மீதுள்ள குண்டர் சட்ட வழக்கை முன்கூட்டியே விசாரிக்க மனைவி கோரிக்கை..உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னை: பாலியல் புகாரில் சிக்கிய பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குண்டர் தடுப்பு சட்ட வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சென்னை கே.கே நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவிகளுக்கு, அந்த பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்ததாக பகீர் குற்றச்சாட்டு எழுந்தது.

அதாவது மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பு எடுக்கும்போது அரைகுறை ஆடையுடன் வந்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது என்று பலவித சேட்டைகளை அரங்கேற்றி வந்தார் ராஜகோபாலன் .
மாணவிக்கு கல்வியை போதித்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய ஆசிரியரே, பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அசோக்நகர் மகளிர் காவல் நிலைய போலீசார் ,ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ பிரிவு உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை அதிரடியாக கைது செய்தனர். பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடர்ந்து புகார்கள் வந்ததால் சென்னை மாநகர காவல் ஆணையரின் உத்தரவுப்படி கடந்த ஜூன் மாதம் ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய அசோக்நகர் மகளிர் காவல் நிலைய போலீசார் 17 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது மனைவி ஆர்.சுதா ஆட்கொணர்வு வழக்கு ஒன்றை ஏற்கனவே தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஆட்கொணர்வு வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று ஆசிரியர் ராஜகோபாலன் மனைவி சுதா உயர்நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 'எனது கணவருக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த நோய் உள்ளது. அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே வழக்கை உடனடியாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். என்று தனது மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.என். பிரகாஷ், ஆர்.என்.மஞ்சுளா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications