அமலாக்கத்துறை சட்டத்தை மீறி இருந்தால் கூண்டில் ஏற்றி இழப்பீடு பெறலாம்.. ஆட்கொணர்வு வழக்கில் நீதிபதி
சென்னை: அமலாக்கத் துறை கொடுத்த கைது நடவடிக்கை குறித்த தகவல்களை செந்தில் பாலாஜி ஏன் வாங்கவில்லை என ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் மேகலாவிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, வாங்கிய பணத்தை சட்ட விரோதமாக பயன்படுத்தியதாக, அமைச்சர் செந்தில் பாலாஜி மீது, மத்திய அமலாக்கப்பிரிவினர், சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக, செந்தில்பாலாஜியின் வீடு, அலுவலகம் ஆகியவற்றில் சோதனை நடத்திய அமலாக்கத் துறையினர், செந்தில் பாலாஜியை கைது செய்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக்கோரி அவரது மனைவி மேகலா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யபட்டது.
இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, மாறுபட்ட தீர்ப்பு கூறியது. இதனால் வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.
இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, எந்தெந்த கருத்துக்களில் இரு நீதிபதிகளும் முரண்பட்டுள்ளனர் என்பது குறித்து மேகலா தரப்பும், அமலாக்கத் துறை தரப்பும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டன.
அதில், நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவிட்ட பின், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தானா? அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க அதிகாரம் உள்ளதா? மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியுமா? என்ற அம்சங்களில் இரு நீதிபதிகளும் முரண்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
கைதுக்கான காரணங்களை மூத்த நீதிபதியான நிஷாபானு கையாளவில்லை எனவும், இளைய நீதிபதியான பரத சக்கரவர்த்தி கையாண்டுள்ளதால் இந்த அம்சத்தில் நீதிபதிகள் முரண்பட்டுள்ளனர் என கூற முடியாது என அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா குறிப்பிட்டிருந்தார். அதே போல கைது செய்யும் முன் நோட்டீஸ் அனுப்ப வகை செய்யும் குற்ற விசாரணை முறைச் சட்டம் 41 ஏ பிரிவு, அமலாக்கத் துறைக்கு பொருந்துமா என்பது குறித்து இரு நீதிபதிகளும் கருத்து தெரிவிக்காத நிலையில் அதுகுறித்த வாதங்களை முன்வைக்க கூடாது எனவும் துஷார் மேத்தா குறிப்பிட்டார்.
ஆனால் இதுசம்பந்தமாக வாதங்களை முன்வைக்க அவகாசம் வழங்க வேண்டும் என மேகலா தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, வழக்கில் இறுதி முடிவெடுக்க வாதம் செய்யலாம் எனத் தெரிவித்த நீதிபதி, செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளதா? இல்லையா?; நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவு பிறப்பித்த பின் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? செந்தில்பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை, நீதிமன்ற காவல் காலமாக கருதலாமா? கூடாதா? என மூன்று கேள்விகளை தீர்மானிக்க விசாரணையை இன்றைய தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
மேலும், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூலை 12ம் தேதியுடன் முடியவுள்ள நிலையில், அவருக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம், காவல் நீட்டிப்பு வழங்கலாம் எனவும் நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில், மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், அமலாக்கத்துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலாவின் வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ தனது வாதத்தில் கூறியிருப்பதாவது: அமலாக்கத் துறை செந்தில் பாலாஜியை விசாரிக்க அதிகாரம் இல்லை. செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவில்லை என அமலாக்கத் துறை குற்றச்சாட்டியுள்ளனர். ஆனால் அது தவறு, செந்தில் பாலாஜி முழு ஒத்துழைப்பையும் வழங்கினார். ஜூன் 13 ஆம் தேதி முதலே அவர் தனது ஒத்துழைப்பை வழங்கி வருகிறார் என்றார்.
இந்த நிலையில் நீதிபதி கார்த்திகேயன் குறுக்கிட்டு, அமலாக்கத் துறை கைதுக்கான ஆவணத்தை கொடுக்க போது செந்தில் பாலாஜி ஏன் மறுப்பு தெரிவித்தார். கைது நடவடிக்கை சட்டத்தை மீறி நடந்திருந்தால் அமலாக்கத் துறை அதிகாரிகளிடம் இழப்பீடு பெறலாம் என நீதிபதி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications