குழந்தை காணாமல் போனது கூட தெரியாமல் போதையில் கிடந்தேனா? வைரல் வீடியோவுக்கு கோவை சிறுமி தாய் மறுப்பு
கோயமுத்தூர்: நானே குழந்தையை பறிகொடுத்துவிட்டு இருக்கும் நிலையில் என்னை பற்றி தேவையில்லாமல் வதந்திகளை பரப்ப வேண்டாம் என கோவை சூலூர் சிறுமியின் தாய் விளக்கம் அளித்துள்ளார். அதாவது குழந்தையின் தாய்க்கு மதுப்பழக்கம் இருப்பதாகவும், குழந்தையை காணவில்லை என்பது கூட தெரியாமல் போதையில் படுத்திருந்ததாகவும் பெண் ஒருவர் வீடியோவில் கூறியிருக்கும் நிலையில் மறுத்துள்ளார்.
கோவை சூலூரில் 10 வயது குழந்தை கார்த்தி என்ற நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் அந்த குழந்தையின் தாய் மீது எழுந்த பல்வேறு விமர்சனங்களுக்கு அவர் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: என் குழந்தை மருத்துவமனையில் இருந்த போது நான் குழந்தையை பார்க்க போலீஸார் என்னை உள்ளே விடவில்லை. அதையும் மீறி நான் போகாததற்கு காரணம், நான் சாப்பிட்டு 5 நாட்கள் ஆனதால், எனக்கு கடுமையான தலைச் சுற்றல் இருந்தது.
என் குழந்தையை கடைசி வரை கண்ணில் காட்டவே இல்லை. குழந்தைக்கு இறுதி சடங்கு செய்வது குறித்து எனக்கு தகவல் அறிந்து நாங்கள் காரில் பதறி அடித்து சென்றோம். நாங்கள் வந்து கொண்டிருப்பது எனது கணவர் வீட்டாருக்கு தெரியும். அப்படி தெரிந்திருந்தும் குழந்தையை அரை மணி நேரம் கூட வைத்திருக்காமல் எரித்துவிட்டார்கள்.
குழந்தை ஏற்கெனவே சித்ரவதையை அனுபவித்துள்ளது. அப்படியிருக்கும் போது எதற்காக எரிக்க வேண்டும்? குழந்தை ஏற்கெனவே அந்த கடத்திச் சென்ற 2 பேரால் நொந்து போயிருந்தது என சொன்ன போது குறுக்கிட்ட செய்தியாளர், "குழந்தை காணாமல் போன போது நீங்கள் மது குடித்துவிட்டு வீட்டில் படுத்திருந்ததாக ஒரு பெண் வீடியோவில் தெரிவித்துள்ளாரே, சம்பவம் நடந்த அடுத்தநாள் வரை நீங்கள் போதையில் இருந்ததாக சொல்கிறார்களே" என கேட்டார்.
அதற்கு அந்த சிறுமியின் தாய் பதிலளிக்கையில், என்னை பற்றி தேவையில்லாமல் நிறைய பேர் வதந்தி பரப்பி வருகிறார்கள். நாங்கள் குழந்தையை இழந்துவிட்டு இருக்கும் நிலையில் இதென்ன புது கட்டுக் கதை?
என்னை பற்றி பேசிய அந்த பெண்ணுக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள், என்னை விட்டுவிட்டு தவறு செய்தவர்களுக்கு அவர் துணை போகிறாரா? என கேள்வி எழுப்பினார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், குழந்தை 5 மணிக்கு காணாமல் போனது, ஆனால் அவரது அப்பா வந்துதான் குழந்தையை காணவில்லை என்பதை கண்டுபிடித்தார், அது வரை உங்களுக்கு மிஸ்ஸானதே தெரியவில்லை என கேட்டார்.
அதற்கு அந்த தாய் கூறுகையில், "எனது கணவருக்கு அளவுக்கு மீறிய மது குடிக்கும் பழக்கம் இருக்கிறது. என் குழந்தை காணாமல் போனதற்கு முந்தைய நாள் ஒரு கருப்பு நிற ஜூஸில் மதுபானத்தை கலந்து வைத்து பிரிட்ஜில் வைத்திருந்தார். எனக்கு இது தெரியாது. நான் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு தூங்கி எழுந்து மதியம் 2 மணிக்கு வெயில் கொடுமைக்காக பிரிட்ஜில் இருந்து எடுத்து கொஞ்சம் குடித்தேன்.
குடித்ததும் ஒரு மாதிரி இருந்தது. உடனே அதை அப்படியே வைத்துவிட்டேன். எனக்கு தலைச் சுற்றியதால் நான் மீண்டும் தூங்கிவிட்டேன். அந்த நேரத்தில்தான் என் குழந்தை கடைக்கு போயிருந்தாள். இதே அந்த குளிர்பானத்தை குழந்தை எடுத்து குடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும், இவன் (கணவர்) ஏன் மதுவை குளிர்பானத்தில் கலந்து வைத்திருக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
அப்போது செய்தியாளர்கள், உங்கள் வீட்டில் மதுபானம், இருந்த புகைப்படம் வெளியாகியிருக்கிறது, எனவே உங்களுக்கு தொடர்ந்து மதுபழக்கம் இருக்கிறது என சொல்கிறார்களே என்று கேட்டனர்.
அதற்கு அந்த தாய், சொல்கிறவர்கள் ஆயிரம் சொல்லட்டும்,நான் இந்த இடத்திற்கு வந்தே ஒரு மாதம்தான் ஆகியிருக்கிறது. என்னை பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்? 10 ஆண்டுகளாக என் கணவர் எனக்கு செய்யும் டார்ச்சர் குறித்தும் அவர்களுக்கு தெரியாது. எனவே பேசுறவங்க ஆயிரம் பேசட்டும் என அந்த சிறுமியின் தாய் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications