சென்னையில் பச்சிளம் குழந்தை கடத்தல்.. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்! 5 மணி நேரத்தில் குற்றவாளி கைது!
சென்னை: ராயபுரம் ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், கடத்தப்பட்ட குழந்தையை போலீசார் 5 மணி நேரத்தில் பத்திரமாக மீட்டிருக்கின்றனர்.
கடத்தப்பட்ட குழந்தையை புளியந்தோப்பு பகுதியில் போலீசார் மீட்டிருக்கின்றனர். குழந்தையை கடத்தியதாக கொடுங்கையூரை சேர்ந்த ரோஸ்மேரி என்பவரையும் போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.

கடந்த 13ம் தேதி கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு கடந்த 9 நாட்களுக்கு முன்னர் குழந்தை பிறந்திருக்கிறது. இதனையடுத்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார். குழந்தையை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு புறப்பட வெளியே வந்தபோதுதான், அவரை அழைத்து செல்ல வீட்டிலிருந்து யாரும் வரவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது.
இதனையடுத்து மருத்துவமனை வளாகத்தில் காத்திருந்திருக்கிறார். அப்போது அவருக்கு உதவுவதை போல வந்த பெண் ஒருவர், குழந்தையை நைசாக கடத்தி சென்றிருக்கிறார்.
இதனையடுத்து தாய் உடனடியாக ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, புகாரின் பேரில் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த அவர்கள், குழந்தையுடன் சந்தேகம்படும்படி இருந்த ஆட்களை அடையாளம் கண்டு தேட தொடங்கினர். சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற தேடுதலில் குழந்தையை கடத்திய ரோஸ்மேரி என்பவரை கைது செய்திருக்கின்றனர். 5 மணி நேரத்தில் கடத்தப்பட்ட குழந்தையை போலீசார் மீட்டது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications