தருமபுரம் ஆதினத்திற்கு மிரட்டல்! பாஜக நிர்வாகி அகோரத்தின் ஜாமீன் மனு மீது பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்திற்கு மிரட்டல் விடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான பாஜக நிர்வாகி அகோரத்தின் ஜாமீன் மனு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மிகவும் பழமையான மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்தின் 27 வது தலைமை மடாதிபதியாக இருப்பவர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார்.

இவரின் உதவியாளர் விருதகிரி என்பவர் மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் மனு ஒன்றை கடந்த பிப்ரவரி 21 ம் தேதி அளித்துள்ளார்.
அதில், தலைமை மடாதிபதி தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாக கூறி மிரட்டல் விடுத்ததாக வினோத், செந்தில், விக்னேஷ் ஆகியோர் மிரட்டியதாகவும், அதற்கு செம்பனார்கோவிலை சேர்ந்த தனியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ க தலைவர் அகோரம், மதுரையை சேர்ந்த வக்கீல் ஜெயச்சந்திரன், செம்பனார்கோவில் ஆகியோர் தூண்டுதலாக இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் அகோரம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், தனக்கு ஜாமின் வழங்கக் கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி T. V. தமிழ் செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அகோரத்திற்கு எதிராக 47 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது எனவும் காவல்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனை, பதில் மனுவாக தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை நாளை மறுநாளுக்கு (ஏப்ரல் 10) ஒத்திவைத்தார்.











Click it and Unblock the Notifications