அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் சகோதரரை கைது செய்யத் தடை! ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: ரூ 100 கோடி நில மோசடி வழக்கில் முன்ஜாமீன் கோரிய அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் மனு செல்லாததாகி விட்டதாக கூறி தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் அவரது சகோதரர் எம்.ஆர். சேகரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளதாக கூறி, வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்பட ஏழு பேர் மீது பதியப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கரும், அவரது சகோதரர் சேகரும் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், அரசியல் பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு தொடர்பான ஆவணங்களை காவல் துறையினர் ஏற்கனவே கைப்பற்றியுள்ள நிலையில், தங்களிடம் விசாரணை நடத்த எந்த அவசியமும் இல்லை என்பதால் முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது சகோதரர் எம்.ஆர். சேகரின் மனு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் K.M.D. முகிலன், தாங்கள் சொல்லும் நபருக்கு நிலத்தை விற்க வேண்டுமென எம்.ஆர். சேகர் மிரட்டியதாகவும், 60 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்திற்கு 95 லட்சம் ரூபாய் மட்டுமே தரப்பட்டுள்ளதாக கூறினார். விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, விசாரணையின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை ஜூலை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அதுவரை எம்.ஆர். விஜய பாஸ்கரின் சகோதரர் எம்.ஆர்.சேகரை கைது செய்ய இடைக்கால தடை விதித்த நீதிபதி விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை அழைக்கும் போது ஆஜாரகி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென எம்.ஆர். சேகருக்கு உத்தரவிட்டனர்.
இதனிடையே, எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டு விட்டதால் அவரது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications