கரூரில் நடந்தது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு.. அரசு அமைதியாக இருக்கக்கூடாது - உயர்நீதிமன்றம்
சென்னை: "கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு (Man made disaster). சட்டத்திற்கு முன் அனைவரும் சமம், எனவே இந்த சம்பவத்தில் அரசு அமைதியாக இருக்கக்கூடாது" என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது.
கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அரசியல் கட்சிகளின் ரோடு ஷோவிற்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என கோரிய மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் நீதிமன்றம் மேற்குறிப்பிட்ட கருத்தை தெரிவித்திருக்கிறது.

மேலும், சம்பவத்திற்கு பொறுப்பேற்காத தவெக செயலுக்கு நீதிபதி செந்தில்குமார் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். கரூர் சம்பவம் தொடர்பாக விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை நியமிக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
எனவே இந்த வழக்கின் ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்க கரூர் போலீசாருக்கு உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். மக்கள் பாதிக்கபட்டபோது அவர்களை காப்பாற்ற வேண்டிய கட்சியினர் அங்கிருந்து விலகிச் சென்று இருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்கு பதிவு செய்வதில் ஏன் தாமதம்? விஜய் பயணித்த பேருந்து பறிமுதல் செய்வதில் ஏன் தாமதம்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
கரூர் நெரிசல் தொடர்பான வீடியோ மனதை உலுக்குகிறது என்று கூறியுள்ள நீதிபதி, கரூர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியவருக்கு தலைமை பண்பே இல்லை. தொண்டர்கள் ரசிகர்கள் மக்களை கைவிட்டு பொறுப்பற்ற முறையில் தலைவர் வெளியேறியுள்ளார் என்றும் நீதிபதி செந்தில்குமார் கூறியிருக்கிறார்.
அதேபோல தவெக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அவர் புரட்சி தொடர்பாக தனது x தளத்தில் பதிவிட்டிருந்தார். இது குறித்து கேள்வி எழுப்பிய நீதிமன்றம், ஆதவ் அர்ஜுனா என்ன சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications