சூடுபிடிக்கும் சூரப்பா வழக்கு.. விசாரணை அறிக்கையை இரண்டு வாரங்களில் வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம்
சென்னை : அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை இரண்டு வாரங்களில் அவருக்கு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி, அதுதொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவை நியமித்து முந்தைய அதிமுக அரசு உத்தரவிட்டது.
இந்த ஆணையத்தின் விசாரணையை எதிர்த்து சூரப்பா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதித்து கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.
ஆணையம்
இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி கலையரசன் ஆணைய அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் அரசு தாக்கல் செய்தது. அப்போது, இந்த விசாரணை அறிக்கையின் நகலை சூரப்பாவுக்கு வழங்குவது குறித்து நீதிபதி கேள்வி எழுப்பி இருந்தார். தமிழக அரசு தரப்பில், விசாரணையின் அறிக்கையை பல்கலைகழக வேந்தரான ஆளுனருக்கு மட்டுமே அனுப்ப உள்ளதாகவும், அதை சூரப்பாவிற்கு தர இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டது. அரசின் அறிவுரைப்படி 3 மாதங்களில் ஆளுநர் முடிவெடுக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி கேள்வி
ஆனால், விசாரணை அறிக்கையை சூரப்பாவுக்கு வழங்க அரசு ஏன் தயங்குகிறது என கேள்வி எழுப்பிய நீதிபதி, வேந்தர் முடிவெடுப்பதற்கு முன்பாக வழங்கினால் தான் சம்பந்தப்பட்ட நபர் விளக்கமளிக்க வாய்ப்பளிக்க முடியும் என தெரிவித்தார். அப்போது அரசு தரப்பில் வேந்தர் என்ற அடிப்படையில் அவரது பணி சட்டப்பூர்வமான பணி என்றும், அரசியலமைப்புச் சட்ட பணி இல்லை என தெரிவிக்கப்பட்டது.
ஆணையம் அமைக்கப்பட்டது தவறு
அப்போது சூரப்பா தரப்பில் தனக்கு எதிரான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதே வேந்தரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்திருந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி பார்த்திபன், நீதிபதி கலையரசன் விசாரணை ஆணைய அறிக்கையை இரண்டு வாரங்களில் சூரப்பாவுக்கு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
அறிக்கையை வழங்க உத்தரவு
மேலும், வேந்தருக்கு அறிக்கையை அனுப்பும் முன்பாக அதை சூரப்பாவுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்த நீதிபதி, விசாரணை அறிக்கை தொடர்பாக நான்கு வாரங்களில் சூரப்பா தனது விளக்கத்தை அரசுக்கு அளிக்க செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.