பிரேமானந்தா அறக்கட்டளை சொத்து விவகாரம்.. ஐடி நோட்டீஸை ரத்து செய்ய மறுத்து உயர்நீதிமன்றம் அதிரடி
சென்னை: பிரேமானந்தா அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்யும் வகையில் வருமான வரித்துறை சார்பில் அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
திருச்சி மாவட்டம் விராலிமலை பாத்திமா நகரில் ஆசிரமம் தொடங்கி நடத்தி வந்தவர் பிரேம்குமார் என்கிற பிரேமானந்தா. இவர் இலங்கையை சேர்ந்தவர். பிரேமானந்தா தனது சிஷ்யைகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகவும், கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு சிக்கினார்.

இதுதொடர்பான வழக்கில் பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இறந்தார்.
முன்னதாக பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் பிரேமானந்தா கைது செய்யப்பட்ட பின், கடந்த 1994ம் ஆண்டு அவரது ஆசிரமத்தில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர், 76 லட்சம் ரூபாய்க்கான நிரந்தர வைப்பீடு, 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான அந்நிய கரன்சி நோட்டுகள் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றினர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், பிரேமானந்தாவுக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதன் தொடர்ச்சியாக, கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி மோசடி சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டத்தின் கீழ் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்வது தொடர்பாக, 2005ம் ஆண்டு பிரேமானந்தா அறக்கட்டளைக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை எதிர்த்து பிரேமானந்தா அறக்கட்டளை சார்பில் கடந்த 2007-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நிலுவையில் இருந்த இந்த வழக்கு 17 ஆண்டுகளுக்கு பின் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அறக்கட்டளை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரேமானந்தா கடந்த 2011-ம் ஆண்டு சிறையில் இறந்து விட்டதாகவும், இந்நிலையில் அந்நிய செலவாணி மோசடி சட்டத்தின் கீழ் சொத்துக்களை பறிமுதல் செய்வது தொடர்பாக, சட்ட விதிமுறைகளுக்கு புறம்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் சரியான நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை என்றார். மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், இந்த வழக்கில் கடந்த 2006-ம் ஆண்டே அறக்கட்டளை தரப்பினர் நேரில் ஆஜராகி ஆட்சேபம் தெரிவித்து, விசாரணையிலும் பங்கெடுத்துள்ளனர். சட்ட விதிகளைப் பின்பற்றியே நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார். இதை ஏற்ற நீதிபதிகள், பிரேமானந்தா அறக்கட்டளைக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் மீதான விசாரணையை சட்ட ரீதியாக எதிர்கொள்ள வேண்டும் என உத்தரவி்ட்டு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications