ஸ்டெர்லைட் ஆலை திறக்கணும்.. மீண்டும் வழக்கு போட்ட வேதாந்தா.. சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் வளாகத்தில் கிரீன் காப்பர் உற்பத்தி செய்ய அனுமதி அளிக்க வேதாந்தா நிறுவனம் கோரிக்கை விடுத்த நிலையில், அதைத் தமிழக அரசு திட்டவட்டமாக மறுத்திருந்தது. இதற்கிடையே அனுமதி மறுத்த அரசின் உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அதில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அனைவருக்கும் நினைவில் இருக்கும். இந்த ஆலை உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் மிக மோசமான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்டது. இந்த ஆலையை மூட வலியுறுத்தி மிக பெரிய மக்கள் போராட்டமும் நடைபெற்றது.

ஸ்டெர்லைட் போராட்டம்
அப்படி 2018ல் நடந்த போராட்டத்தில் திடீரென போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 போராட்டக்காரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து வழக்கு ஒன்றில் ஸ்டெர்லைட் ஆலையை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து தமிழக அரசும் இது தொடர்பான உத்தரவைப் பிறப்பித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட போதிலும், வேதந்தாவுக்கு சாதகமாகத் தீர்ப்பு வரவில்லை.
இதற்கிடையே தூத்துக்குடி ஸ்டெர்லைட் வளாகத்தில் கிரீன் காப்பர் உற்பத்தி செய்ய அனுமதி கோரி ஜனவரி 9ம் தேதி வேதாந்தா விண்ணப்பித்து இருந்தது. இருப்பினும், ஜனவரி 27ம் தேதி அந்த விண்ணப்பத்தைத் தமிழக அரசு நிராகரித்தது.. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
வேதாந்தா வழக்கு
அப்போது தமிழக அரசு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய வேதாந்தா, நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் வல்லுநர் குழுவை அமைக்க வேண்டும் என்றும் அந்தக் குழு கிரீன் காப்பர் உற்பத்தி செய்யும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியது. மேலும், தங்கள் விண்ணப்பத்தை நிராகரிக்கும் முன்பு, அது குறித்து விளக்கம் அளிக்கக் கூட தங்களுக்கு வாய்ப்பு தரப்படவில்லை என்றும் இது விதிகளுக்கு முரணானது என்று வேதாந்தா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எனவே, வல்லுநர் குழுவை அமைக்க வேண்டும் என்றும் அந்த வல்லுநர் குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
கடும் எதிர்ப்பு
இருப்பினும், தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், இதை மிகக் கடுமையாக எதிர்த்தார். வேதாந்தாவின் இந்தக் கோரிக்கை மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் முயற்சி என்றும், அந்த ஆலை அமைந்துள்ள பகுதி ஏற்கனவே மாசடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
உத்தரவு
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், இந்த விவகாரத்தில் மாநில அரசு மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை பிப்ரவரி 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பொதுவாகக் காப்பர் உற்பத்தி செய்யப்படும்போது மாசுபாடுகள் அதிகரிக்கும். ஆனால், குறைந்த அளவு சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி, குறைந்த கார்பன் எமிஷனோடு தயாரிக்கப்படுவது தான் 'கிரீன் காப்பர்'. இதன் உற்பத்திக்குத் தான் வேதாந்தா அனுமதி கோரி வழக்கு போட்டுள்ளது.












Click it and Unblock the Notifications