குரங்கு குட்டியை பார்க்க கால்நடை மருத்துவருக்கு அனுமதி! அடையாளம் கண்டுகொண்டதா என அறிக்கை அளிக்க ஆணை!
சென்னை: தெரு நாய்களால் கடிபட்டு காயமடைந்த குரங்கு குட்டி, சிகிச்சைக்குப் பின்னர் வண்டலூர் உயிரியல் பூங்காவில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அந்தக் குரங்கு குட்டியை பார்வையிட, சிகிச்சை அளித்த கால்நடை மருத்துவருக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கால்நடை மருத்துவர் வல்லயப்பன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாமில், நாய்களால் கடிக்கப்பட்டு காயமடைந்த ஒரு குரங்கு குட்டியை வனத்துறை பாதுகாப்பாளர் ஒருவர் கொண்டு வந்ததாகவும், சுமார் 10 மாத சிகிச்சைக்கு பிறகு குணமடைந்த குரங்கு குட்டியை வனத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 26 ஆம் தேதி வாங்கிச் சென்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் விட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், அந்த குரங்கு குட்டிக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்க வாய்ப்புள்ளதால், குரங்கு குட்டி பூரணமாக குணமடையும் வரை தனது கட்டுப்பாட்டில் ஒப்படைக்க வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மருத்துவர் வல்லயப்பன் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள குரங்கு குட்டியை நவம்பர் 9 ஆம் தேதி காலை 11 மணிக்கு நேரில் பார்வையிட மனுதாரருக்கு அனுமதியளித்து உத்தரவிட்டார். குரங்கு குட்டி, மருத்துவரை அடையாளம் கண்டு கொண்டதா என்பது குறித்து அறிக்கை அளிக்கவும் வனத்துறைக்கு உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 14ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications