உடனே விசாரிக்காவிட்டால் வானம் இடிந்து விழாது! TNUSRB தலைவர் விவகார வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
சென்னை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கை உடனடியாக விசாரிக்க முடியாது. வழக்கை உடனடியாக விசாரிக்கவில்லை என்றால் வானம் இடிந்து விழுந்துவிடாது எனக்கூறிய நீதிபதி அனைத்திற்கும் அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று அதிமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் போலீஸ் துறைக்கு தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்த பணியை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தான் தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது.
சுனில் குமார் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்.தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றினார். கடந்த 1988ம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியான இவர் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி தமிழ்நாடு காவல்துறையின் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் தான் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக சுனில்குமாரின் நியமனத்தை ரத்து செய்யக் கோரி அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் மற்றும் சுனில்குமார் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்திருந்தது.
வழக்கு இன்று பட்டியிலப்படாத நிலையில் மனுதாரதர் தரப்பில் நீதிபதி வி.பவானி சுப்பராயன் முறையிடப்பட்டது. அப்போது, பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு விட்டதா? என்பது குறித்து கேட்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்ட நீதிபதி வழக்கை பட்டியிலடுவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என கூறினார்.
மனுதாரர் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட நிலையில், நியமிக்கப்பட்ட நபர் தகுதி இல்லாத நபராக இருந்தால் மட்டுமே தலையிட முடியும் இல்லையென்றால் அரசின் கொள்கை முடிவில் எவ்வாறு தலையிட முடியும் எனக் கேள்வி எழுப்பினார். இந்த வழக்கை உடனடியாக விசாரிக்கவில்லை என்றால் வானம் இடிந்து விழுந்துவிடாது எனக்கூறிய நீதிபதி அனைத்திற்கும் அரசியல் சாயம் பூச வேண்டாம் எனவும் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications