கரூர் சம்பவம்.. சுத்து போட்ட 8 கேஸ்கள்.. இன்று சென்னை ஐகோர்ட் பிறப்பித்த முக்கிய உத்தரவு!
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான 8 வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன. அனைத்து வழக்குகளும் நவம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில், கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், ரோடு ஷோக்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கக் கோரிய வழக்கை இரு நீதிபதிகள் அமர்வு விசாரணை செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், கரூர் துயரச் சம்பவம் தொடர்பான வழக்குகளை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வே விசாரணை நடத்துகிறது. தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வு, இன்று இந்த வழக்குகளை விசாரிக்க உள்ளது.
கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், முன் ஜாமீன் கோரிய மனு, தலைமை நீதிபதி அமர்வில் இன்றைக்கு பட்டியலிடப்பட்டது.
அதேபோல, கரூர் சம்பவம் காரணமாக, மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த கே.ராஜன் என்பவர் தாக்கல் செய்த வழக்கும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.
மேலும், விஜய் பிரச்சாரக் கூட்டங்களுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாகக் கூறி, தவெக தரப்பில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு, நிலுவையில் இருந்த வழக்கும், தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.
கரூர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை எஸ்.பி., - டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, தவெக நிர்வாகி கார்த்தீபன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது.
அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சாரத்தின்போது, டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பது, தீ விபத்து தடுப்பு கண்காணிப்பு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் வழங்குவதை கட்டாயமாக்கக் கோரிய வழக்கும் இன்றைக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.
இதுதவிர, கரூர் துயர சம்பவத்தைத் தொடர்ந்து, தபெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டபோது, சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டு, வன்முறையை தூண்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, தவெக தேர்தல் பிரச்சார பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த மனுவும் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.
தலைமை நீதிபதி எம்.எம் ஸ்ரீவஸ்தவா, மற்றும் ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் முதல் வழக்காக காலை விசாரணைக்கு வந்தது. முதலில் தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் முன்ஜாமீன் கேட்ட மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது மனுதாரர் சார்பில் இந்த மனுவை வாபஸ் பெறுவதாக கூறியதை ஏற்று அம்மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், எஸ்.பி ஆகியோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கேட்டு மதுரையைச் சேர்ந்த ராஜன் தொடர்ந்த வழக்கு, ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த வழக்கு என அனைத்தையும் ஒத்திவைத்த நீதிபதிகள் அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
அரசியல் கட்சிகளின் பேரணிகள் பொதுக்கூட்டங்களை ஒழுங்கு படுத்துவதற்கு வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் 10 நாட்கள் அவகாசம் வழங்கியது. அவ்வாறு தாக்கல் செய்யத் தவறினால் இடைக்கால வழிகாட்டு நெறிமுறைகள் நீதிமன்றத்தால் வழங்கப்படும் என்று தலைமை நீதிபதி கூறினார். அனைத்து வழக்குகளும் நவம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேபோல, கரூர் துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பாஜகவை சேர்ந்த சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன் தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு வந்தது. வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்ததால் அவரது மனுவை தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி அமர்வு இன்று உத்தரவிட்டது.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மாமல்லபுரத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை தவெக தலைவர் விஜய் இன்று சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார். இந்நிலையில், கரூர் சம்பவம் தொடர்பான 8 வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications