நிலத்தை அபகரிக்கும் மக்கள் பிரதிநிதிகளை விடாதீர்கள்... காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்..!
சென்னை: நில அபகரிப்பில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகளை எக்காரணம் கொண்டு விட்டுவிடக் கூடாது என்றும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மக்கள் பிரதிநிதிகள் நில அபகரிப்பில் ஈடுபட்டால் அது ஜனநாயகத்திற்கே அச்சுறுத்தல் தரக்கூடியது என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தேர்தலில் போட்டியிட்டு வெற்று பெற்று பதவியில் இருப்பவர்கள் அனைவரும் மக்கள் பிரதிநிதிகள் தான். ஊராட்சி வார்டு கவுன்சிலர் தொடங்கி எம்.பி., எம்.எல்.ஏ. என எல்லா பதவிகளும் இதில் அடங்கும்.
நாமக்கல் மாவட்டம், கபிலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர், கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் நில அபகரிப்பு, முறைகேடுகளில் ஈடுபட்டது குறித்து கேள்வி எழுப்பி வந்துள்ளார்.
இந்நிலையில், பிரதான குழாயில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்ததாக கூறி, அவரது வீட்டின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், மக்களுக்காக சேவையாற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், நில அபகரிப்பு போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக புகார் வந்தால் அது குறித்து விசாரிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டார்.
மக்கள் பிரதிநிதிகள், நில அபகரிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபடுவது என்பது ஜனநாயகத்துக்கே அச்சுறுத்தலானது எனக் குறிப்பிட்ட நீதிபதி, அவர்கள் மீது எந்த கருணையும் காட்டாமல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
அதிகாரிகளை மிரட்டும் நோக்கில் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு கோருவதை ஏற்க முடியாது எனக் கூறிய நீதிபதி, இரு தரப்பினரின் புகார் குறித்து விசாரித்து, முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதனிடையே கடந்த 2011-ம் ஆண்டு திமுகவை தேர்தலில் வீழ்த்தி முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, நில அபகரிப்பு தடுப்புச் சட்டத்தை இயற்றி இவ்விவகாரத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நில அபகரிப்பில் ஈடுபடுவதை பொறுத்துக் கொள்ள முடியாது என்கிற வகையில் உயர்நீதிமன்றம் இவ்விவகாரத்தில் கடுமை காட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications