அதிமுக பொதுக்குழு வழக்கு: இறுதி பதில் வாதங்களை அடுக்கிய ஓபிஎஸ் அணி! ஜூன் 28க்கு தள்ளிவைத்தது ஐகோர்ட்
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற அமர்வில் இன்று நடைபெற்ற நிலையில், ஓபிஎஸ் தரப்பு இறுதி பதில் வாதங்களை முன்வைத்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கு ஜூன் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டே இருப்பதால் அதிமுக வழக்கு தொடர்பாக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11 இல் அதிமுக பொதுக் குழுவில் ஓபிஎஸ்ஸை நீக்குவது, அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடியை தேர்வு செய்வது போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இந்த தீர்மானங்களை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு மனுக்களை தொடர்ந்தது. இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்பட்டு எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
அதிமுக பொதுக் குழு வழக்குடன் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கையும் ஓபிஎஸ் அணி தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு வழக்கு கடந்த 12 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இபிஎஸ் தரப்பு வாதத்தில், கட்சி விதிப்படி, ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியுள்ளோம், அவரை மீண்டும் கட்சியில் சேர்த்தால் குழப்பம் அதிகரிக்கும். ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால், எந்த விளக்கமும் கேட்காமல் தன் சொந்த தம்பி ராஜாவை கட்சியை விட்டு நீக்கினார்.
அதே போல்தான் ஓபிஎஸ் நீக்கத்திலும் நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. கட்சி விதிகள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டவை அல்ல, காலத்திற்கு ஏற்ப கட்சி விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என எடப்பாடி தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கு விசாரணையை ஜூன் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இன்று ஐகோர்ட்டில் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீர் அமர்வில் விசாரணை நடைபெற்றது.
இதுவரை எடப்பாடி தரப்பு வாதம் கேட்கப்பட்டு வந்த நிலையில், இன்று ஓபிஎஸ் தரப்பு பதில் வாதங்களை முன்வைத்தது. அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன.
எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய 10 நாட்கள் அவகாசம் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 28ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.












Click it and Unblock the Notifications