சென்னை ஆலப்பாக்கத்தில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அருள்வாக்கு சாமியார்.. நடந்த பகீர் சம்பவம்
சென்னை: சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தில் மனைவி கோபித்துக் கொண்டு போனதற்கு அருள்வாக்கு சொன்ன சாமியாரே காரணம் என நினைத்து, அவரது கணவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட அருள்வாக்கு சாமியாரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்..
இதற்கிடையே திருமலையை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அடித்து உதைத்து போலீஸ் வசம் ஒப்படைத்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(56), இவர் அதே பகுதியில் ஆதிபராசக்தி அங்காளபரமேஸ்வரி ஆலயம் வைத்து பொதுமக்களுக்கு அருள்வாக்கு சொல்லி வருகிறார்
வீட்டை விட்டு சென்றார்
இவர் அருள்வாக்கு சொல்லி வரும் பகுதி அருகே வசித்து வருபவர் திருமலை(38), இவரது மனைவி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கணவருன் சண்டை போட்டுவிட்டு, கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.
திருமலை ஆத்திரம்
தனது மனைவி கோபித்துக் கொண்டு சென்றதற்கு அருள்வாக்கு சொல்லும் ராஜேந்திரன் தான் காரணம் என்று திருமலை நினைத்துக்கொண்டார். தன்னை பற்றி தவறாக சொல்லியிருக்கலாம் என்று எண்ணிய் திருமலை, ராஜேந்திரனை ஆத்திரத்தில் கொல்ல முடிவு செய்தார்.
ஆத்திரத்தில் முடிவு
இதன்படி சாமியார் ராஜேந்திரனை சந்திக்க வந்த திருமலை தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சென்று திடீரென ராஜேந்திரனின் வயிற்றில் குத்தி உள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத ராஜேந்திரன் ரத்த வெள்ளத்தில் அலறியபடியே மயங்கினார்.
போலீசார் விசாரணை
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து திருமலையை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கிய மதுரவாயல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கத்திக்குத்து பட்ட ராஜேந்திரன் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மனைவி கோபித்து சென்றதற்கு சாமியார்தான் காரணம் என எண்ணி சாமியாரை கத்தியால் குத்திய நபரால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.