“நீ என்ன புள்ளிங்கோவா?” சிறுவர்களிடம் அத்துமீறிய சென்னை காவல் ஆய்வாளர்! அதிரடி காட்டிய அதிகாரிகள்!
சென்னை: சென்னை எம்.கே.பி. நகர் பகுதியில் விசாரணைக்கு சென்ற போது, அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த 17 வயதுடைய 4 சிறுவர்கள், வித்தியாசமாக சிகை அலங்காரம் செய்திருந்ததால் கடைக்கு அனுப்பி மொட்டை அடிக்க வைத்ததாக காவல் ஆய்வாளர் பென்சாம் மீது புகார் எழுந்தது. இதனையடுத்து ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
வடசென்னை வாழ்வியலை பிரதிபலிக்கும் இளைஞர்களை கேலியாக சித்தரிக்கும் சொல்தான் 'புள்ளிங்கோ'. தோற்றத்தை வைத்தும், உடையை வைத்தும் அவர்கள் இவ்வாறு அடையாளப்படுத்துகின்றனர்.

அப்படித்தான் ஆய்வாளர் பென்சாமும் நடந்துக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது. அதாவது, இவர் சென்னை எம்.கே.பி. நகர் பகுதியில் விசாரணைக்கு சென்றிருக்கிறார். எம்.கே.பி. நகர் வடசென்னையின் பிரதான பகுதிகளில் ஒன்று. அங்குள்ள மக்கள் அதன் கலாச்சாரத்தைதானே பிரதிபலிப்பார்கள்? அப்படித்தான் இளைஞர்கள் தங்கள் தலைமுடியை வித்தியாசமாக வைத்திருந்திருக்கிறார்கள். இதை பார்த்த 'இன்சு', அவர்களை ஒழுக்க சீர்கேடாளர்கள் என்று அவதானித்திருக்கிறார்.
அடேங்கப்பா.. பார்த்த மாத்திரத்திலேயே யார் ஒழுக்கமானவர்கள்? என்பதை கண்டறியும் அபாரத்திறமை இவருக்கு எப்படி வந்தது என்பதை நிச்சயம் ஹாவர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு செய்தே ஆக வேண்டும்.
இப்படி தனது ஞானத்தின் மூலம் அடையாளம் காணப்பட்ட சிறார்களை கையும் களவுமாக லபக் என பிடித்து.. அருகில் உள்ள முடி திருத்தும் கடைக்கு அழைத்து சென்றிருக்கிறார். சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் கைகளில், தாங்கள் சிக்கியுள்ளோம் என்பதை உணர்ந்த அந்த சிறுவர்கள், சைலன்ட் மோடுக்கு சென்றிருக்கிறார்கள். கொஞ்சம் திமிறியிருந்தால், அவர்கள் பாத்ரூமில் வழுக்கி விழுந்திருப்பார்கள்!
கடைசியாக சிறார்களுக்கு மொட்டை அடித்து ஒழுக்கத்தை நிலை நிறுத்தும் தனது தலையாய கடமையை கண் என செய்து முடித்திருக்கிறார் ஆய்வாளர். ஆனால் முடியில்லா மண்டையை பார்க்க சகிக்க முடியாத சிறாரின் பெற்றோர் கொதித்து எழவே, பிரச்சனை சீரியஸாகியிருக்கிறது. மேலதிகாரிகளின் காதுகளுக்கு இது குறித்து விஷயம் போனதுதான் தாமதம். உடனடியாக ஆய்வாளர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்திருக்கிறது காவல்துறை. தற்போது பென்சாம் காத்திருப்பு பட்டியலில் இருக்கிறார்.
பென்சாமின் லீலைகளுக்கு இது தொடக்கம் கிடையாது. கடந்த 2020ல் புழல் காவல்நிலைய ஆய்வாளராக இவர் இருந்திருக்கிறார். அப்போது இவருக்கு ஒரு புகார் வருகிறது. தனது வீட்டில் வாடகைக்கு இருக்கும் நபர், வாடகையும் கொடுக்காமல், காலியும் செய்யாமல் இருக்கிறார். அதை பைசல் செய்ய வேண்டும் என்பதுதான் புகார்.
உரிமையியல் விவகாரத்தில், நீதிமன்ற அனுமதியின்றி காக்கி தலையிட கூடாது என்பதுதான் சட்டம். ஆனால், பென்சாம் களத்தில் குதித்திருக்கிறார். கொரோனாவால் வேலை இழந்து தவித்த வாடகைதாரரை தனது பாணியில் விசாரித்ததாக சொல்லப்படுகிறது. விளைவு அடுத்தநாளே, வாடகைதாரர் தீக்குளித்திருக்கிறார். 85% தீக்காயங்களுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வாக்குமூலத்தில் பென்சாம் தன் மீது தாக்குதல் நடத்தியதால் மனமுடைந்து தற்கொலை செய்துக்கொண்டதாக கூறியிருக்கிறார். வாடகைதாரர் உயிரிழந்த நிலையில், பென்சாம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.
இதனை தொடர்ந்துதான் தற்போது மற்றொரு சர்ச்சயைிலும் அவர் சிக்கியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications