சென்னை ஜோதியால் ஏமாந்த 25 பேர்.. அண்ணா சாலை ஆஸ்பத்திரியையே ஆடிப்போக வைத்த சம்பவம்
சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் டீனுக்கு உதவியாளராக வேலை செய்து வருவதாகவும், ஆஸ்பத்திரியில் புதிதாக ஹெல்பர், லேப் டெக்னீசியன், நர்ஸ், வரவேற்பாளர் உள்ளிட்ட அரசு வேலைக்கான காலி பணியிடங்கள் இருப்பதாகவும் ஜோதி என்பவர் கூறினாராம். இதனை உண்மை என்று நம்பிய 25 பேர் அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர். அந்த வகையில் 10 லட்சம் மோசடி செய்த ஜோதி என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசு மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாகவோ, அரசு அலுவலகங்களில் வேலை வாங்கி தருவதாகவோ, மத்திய அரசு வேலை வாங்கி தருவதாகவோ, ரயில் நிலையத்தில் வேலை வாங்கி தருவதாகவோ, பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாகவோ, ஆசிரியர் வேலை வாங்கி தருவதாகவோ, அரசு அலுவலங்களில் உதவியாளர் வேலை வாங்கி தருவதாகவோ, சத்துணவு மையங்களில் வேலை வாங்கி தருவதாகவா, ரேஷன் கடையில் வேலை வாங்கி தருவதாகவோ யாராவது பணம் கேட்டால், மறந்தும் கொடுக்க வேண்டாம்.

ஏனெனில் பலர் லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் ஏமாற்றி வருகிறார்கள். அமைச்சரை தெரியும், ஐஏஎஸ் அதிகாரியை தெரியும், அந்த அதிகாரியை தெரியும்.. அவர் என் மச்சான்.. அவர் என் மாமா.. என புகைப்படங்களை காட்டி ஏமாற்றினால் நம்ப வேண்டாம்.
ஏனெனில் 100 சதவீதம் அரசு வேலை வாங்கி தருவதாக வரும் ஆஃபர்கள் மோசடியாகவே உள்ளன. எனவே யாரும் எந்த வேலையில் சேரவும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். பணம் கொடுத்து வேலையில் சேர நினைப்பதே ஒரு வகையில் மோசடி தான். எனவே அந்த முயற்சியில் இறங்க வேண்டாம். சென்னையில் ஜோதி என்பவர் செய்த மோசடி பற்றி பார்ப்போம்.
சென்னையை அடுத்த ஆவடி போலீஸ் கமிஷனரகத்துக்குட்பட்ட மீஞ்சூர், புங்கம்பேடு, பஜனை கோவில் தெருவை சேர்ந்த 44 வயதாகும் சதீஷ்குமார் என்பவருக்கு தனது உறவினர் மூலம் ஜோதி என்ற பெண் அறிமுகம் ஆகியிருக்கிறார். இதில், ஜோதி தான் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் டீனுக்கு உதவியாளராக வேலை செய்து வருவதாக அறிமுகம் ஆகியுள்ளார். மேலும் ஓமந்தூரார் மருத்துவமனையில் புதிதாக ஹெல்பர், லேப் டெக்னீசியன், நர்ஸ், வரவேற்பாளர் உள்ளிட்ட அரசு வேலைக்கான காலி பணியிடங்கள் இருப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை உண்மை என்று நம்பிய சதீஷ்குமார் தனது மனைவி மற்றும் உறவினர்கள் என சுமார் 25 நபர்களிடம் கடந்த 2023-ம் ஆண்டு முதல் பல தவணைகளாக மொத்தம் ரூ.10 லட்சம் வரை திரட்டி ஜோதியிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை பெற்றுக்கொண்ட ஜோதி யாருக்கும் வேலை வாங்கி தராமல் சதீஷ்குமாரை பணமோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் சதீஷ்குமார் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மோசடியில் ஈடுபட்ட மீஞ்சூர் வ.உ.சி தெருவை சேர்ந்த ஜோதி என்ற மாதுரி (37) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications