தமிழ்நாட்டின் 26 வருட கனவு சார்.. சென்னை டூ கன்னியாகுமரி.. ரயில் பயண நேரம் 45 நிமிடம் குறைய போகுது
சென்னை: 1998ல் ஆரம்பித்த சென்னை - கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை பணிகள், கிட்டத்தட்ட 26 வருடங்களுக்கு பின்னர் முடிந்துள்ளது.இறுதிக்கட்ட சோதனை நடந்து வரும் நிலையில், விரைவில் தென்மாவட்ட விரைவு ரயில்களின் பயண நேரம், 45 நிமிடங்கள் வரை குறைய போகிறது. கூடுதல் ரயில்களும் இனி இயக்க முடியும்.
இந்தியாவின் ரயில் போக்குவரத்து கட்டமைப்பு மிகவும் அற்புதமாக உள்ள மாநிலங்களில் கேரளாவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு முக்கியமான இடத்தில் இருக்கிறது. எந்த ஊரில் ரயில், விமானம் உள்ளிட்ட கட்டமைப்புகள் சரியாக உள்ளதோ அந்த ஊர் பெரிய அளவில் பொருளாதார ரீதியாக முன்னேறுகிறது. இதில் குறிப்பாக ரயில் கட்டமைப்பு என்பது இந்தியாவிற்குள் எங்கு வேண்டும் என்றாலும் சரக்குகளை எடுத்து செல்லவும் ,பயணிக்கவும் முடியும். அந்த மாவட்டத்திற்கே மிகப்பெரிய நன்மை தரக்கூடியதாக ரயில் பாதை இருக்கும்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் மொத்தம் 4027.08 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில்வே தண்டவாளங்கள் இருக்கிறது. இதில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்லும் வழித்தடம் மிக முக்கியமான வழித்தடம் ஆகும். கன்னியாகுமரி தொடங்கி, நாகர்கோவில், திருநெல்வேலி, வாஞ்சிமணியாச்சி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக சென்னை வரை முக்கியமான ரயில் பாதை இருக்கிறது. இந்த பாதை சென்னை உடன் முடியாது. டெல்லி வரைக்கும், கொல்கத்தா வரைக்கும், மும்பை வரைக்கும், ஏன் காஷ்மீர் வரைக்குமே இந்த பாதை செல்கிறது. இ
இந்நிலையில் தமிழ்நாட்டின் கனவு திட்டம் என்றால், சென்னை முதல் கன்னியாகுமரி வரை இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும் என்பது தான். இந்த திட்டம் 1998ல் துவங்கியது. பல கட்ட போராட்டம் மற்றும் கடுமையான உழைப்பால் 2021ல் மதுரை வரை பணிகள் முடிக்கப்பட்டு, ரயில் சேவையும் துவக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை முதல் மதுரை வரை உள்ள 490 கிலோ மீட்டர் பாதை எந்த சிக்னலும் இல்லால் இரட்டை ரயில் பாதையில் ரயில்கள் சென்று வருகிறது.
அடுத்த கட்டமாக, மதுரை - திருநெல்வேலி - நாகர்கோவில் - கன்னியாகுமரி இடையே, மின்மயமாக்கலுடன் இரட்டை பாதை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடக்க தொடங்கின. கொரோனா முடக்கத்தால் இரண்டு ஆண்டுகள் பணிகள் முடங்கிய நிலையில்,கடந்த இரண்டு ஆண்டுகளாக இரட்டை ரயில்பாதை அமைக்கும் பணிகள் வேகமெடுத்தது. திருநெல்வேலி - நாகர்கோவில் இடையிலான பணிகள் முடிந்துவிட்டது. இதேபோல் நாகர்கோவில் - கன்னியாகுமரி வரையிலான இரட்டை பாதை பணிகளும் முடிந்துவிட்டது, இறுதிகட்ட சோதனை பணிகள் நடந்து வந்த நிலையில்,. இந்த பணிகளுமே முடிந்துவிட்டன. அதிவேக ரயிலை இயக்கி சோதனை ஓட்டமும் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை - கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை திட்டத்தில் பணிகள் முடிந்துவிட்ட காரணத்தால் இன சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களை, படிப்படியாக இரட்டை பாதைகளில் இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இரட்டை பாதையில் ரயில்களை இயக்கினால். தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் பயண நேரம் 45 நிமிடங்கள் வரை நிச்சயம் குறையும். இதேபோல் தென்மாவட்ட ரயில்களின் வேகத்தையும், 130 கி.மீ., வரை அதிகரிக்க முடியும் என்று கூறப்படுவால் பயண நேரம் நிச்சயம்க ணிசமாக குறையும் என்கிறார்கள்.
அதேபோல் தென்மாவட்டங்களுக்கு இனி கூடுதல் ரயில்கள்இயக்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், பயணிகள் வருவாயில் முதலிடத்தில் உள்ள திருநெல்வேலி கன்னியாகுமரி வழித்தடத்தில் அதிக ரயில்கள் இயக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது ஒருபுறம் எனில் நாகர்கோவில்- திருவனந்தபுரம் இடையிலான இரட்டை ரயில் பாதை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த பணிகள் முடிந்தால் திருவனந்தபுரம் வரையிலும் ரயில்கள் இயக்கம் எளிதாகும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications