காசிமேட்டில் ஒரே குஷி.. துள்ளி துள்ளி வந்த "ராட்சசன்".. மகிழ்ச்சியில் மீனவர்கள்.. திரண்ட சென்னை ஜனம்
சென்னை: சென்னையில் காசிமேடு பகுதியே நேற்று பிஸியாகிவிட்டது.. பொதுமக்களும், மீன்பிரியர்களும் காசிமேடு மீன்பிடி சந்தையில் குவிந்துவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை காசிமேடு பகுதியை பொறுத்தவரை, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகளும், 700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும் தினசரி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. அதுவும், வாரஇறுதி விடுமுறையை கணக்கு செய்து, முன்கூட்டியே மீன்பிடிக்க சென்றுவிடுவார்கள்..

ஞாயிற்றுக்கிழமை: எனவே, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் காசிமேடு மீன்பிடி சந்தையில் திருவிழா போல கூட்டம் அலை மோதுவது வழக்கமான ஒன்றுதான்.. அந்தவகையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்றும் கணிசமான விசை படகுகளில் மீனவர்கள் கரை திரும்பியிருந்தனர். ஆனால், வழக்கத்தைவிட காசிமேட்டில் நேற்று கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
காரணம், குடியரசு தினம், தைப்பூசம் என கடந்த 4 நாட்கள் தொடர் விடுமுறை என 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், மீன்களை வாங்க அதிகாலை முதலே பொதுமக்கள் குவிந்தனர்.
வவ்வால்: விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நேற்று அதிகாலை கரை திரும்பினார்கள்.. 500-க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்களுடன் மீனவர்கள் கரை திரும்பினர். மீனவர்களுக்கு கடலில் அதிக அளவு மீன்களும் கிடைத்தன.. முக்கியமாக, வஞ்சிரம், வவ்வால், சீலா, பாறை, சூறை, பால் சுறா போன்ற பெரிய வகை மீன்கள் பிடித்துவரப்பட்டிருந்தன.
அதேபோல, சங்கரா, நண்டு, இறால், கானாங்கத்தை, நவரை, நெத்திலி உள்ளிட்ட சிறிய வகை மீன்களின் வரத்தும் அதிகமாக காணப்பட்டது. கடலில் அதிகளவு மீன்கள் கிடைத்ததால், மீன் விற்பனை களைகட்டியது. காசிமேடு மீன் மார்க்கெட்டில் ஏலம் முறையில் மீன்கள் விற்பனையும் ஆரம்பமாகின.. நேரம் ஆக ஆக, பொதுமக்களின் வருகையும் அதிகரித்தபடியே இருந்தது.. அதுபோல மீன்களின் விலையும் அதிகரித்தவாறே இருந்தது..
வஞ்சிரம் மீன்: அந்தவகையில், கிலோ ரூ.700-க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் மீன், நேற்றைய தினம் கிலோ ரூ.900 ஆக அதிகரித்தது. வெள்ளை நிற வவ்வால், கொடுவா மீன்கள் ரூ.600-க்கும், சிறிய வகை வவ்வால், சங்கரா மீன் ஆகியவை ரூ.600-க்கும், பாறை ரூ.400-க்கும், சீலா, இறால், நண்டு, கடமா பெரியது ஆகியவை தலாரூ.300-க்கும், நவரை, கானாங்கத்தை, நெத்திலி தலா ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து, காசிமேடு மீனவர்கள் சொல்லும்போது, கடலில் எண்ணெய் கசிவு காரணமாக கடந்த ஒரு மாதமாகவே காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன் விற்பனை சரிவை சந்தித்து வந்தது.. இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது... வாடிக்கையாளர்களும் மீன்களை வாங்க பயந்தனர்.. இதனால், மீன்களை விலை குறைவாக விற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
மீன்கள் விற்பனை: நேற்றுதான் ஒரு மாதத்துக்கு பிறகு மீன் விற்பனை சூடுபிடித்தது.. அதனால், கடந்த வாரத்தை விட நேற்று மீன் விலையும் சற்று அதிகம் வைத்தே விற்கப்பட்டது. அந்தவகையில், மீன்களின் விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளது... வரும் வாரங்களிலும் மீன்கள் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கலாம்" என்றனர்.












Click it and Unblock the Notifications