கோயம்பேடு ரோடு ரோலர்.. மனைவியுடன் சென்ற மாற்றுத்திறனாளிக்கு எமனாகியது.. ஒப்பந்ததாரர் மீது ஆக்ஷன்
சென்னை: சென்னை கோயம்பேடு பிள்ளையார் கோவில் தெருவில் நேற்று முன்தினம் இரவு புதிதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த ரோடு ரோலரை டிரைவர் பின்னோக்கி இயக்கினார். இதில், கட்டுப்பாட்டை இழந்த ரோடு ரோலர் அங்கு மனைவியுடன் நின்றிருந்த மாற்றுத்திறனாளிக்கு எமனாக மாறியது.இந்த சம்பவத்தை தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தையும் ரத்து செய்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
ரோடு ரோலர்களை இயக்குவோர் சற்று கவனக்குறைவாக இருந்தால், ரோடு போடும் போது, சாலையில் வைத்து அப்படியே யாரையாவது நசுக்கிவிடும் வாய்ப்பு உள்ளது. அப்படி ஒரு சம்பவம் சில மாதங்கள் முன்பு மதுரையில் நடந்தது. மதுரையில் கடும் வெயிலின் காரணமாக ரோடு ரோலர் வண்டியின் அடியில் அமர்ந்து செல்போன் பயன்படுத்திக் கொண்டிருந்த கட்டிட சூப்பர்வைசர் கடந்த ஜூன்மாதம் உயிரிழந்தார். ரோடுரோலருக்கு அடியில் சூப்பர் வைசர் அமர்ந்திருந்த போது, அந்த நேரத்தில் திருமண மண்டபத்தில் பாடல்கள் அதிக சத்தத்துடன் ஒலித்தது. இதனால் கீழே உட்கார்ந்திருந்த இன்ஜினியர் கத்தியது, ரோடு ரோலரை இயக்கியவருக்கு கேட்கவே இல்லை.. அதேபோல் ஒருசம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை கோயம்பேடு பிள்ளையார் கோவில் தெருவில் கடந்த செப்டம்பர் 6ம் தேதி இரவு புதிதாக சாலை அமைக்கும் பணி நடந்தது. சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த ரோடு ரோலரை டிரைவர் பின்னோக்கி இயக்கினார். இதில், கட்டுப்பாட்டை இழந்த ரோடு ரோலர் அங்கு மனைவியுடன் நின்றிருந்த மாற்றுத்திறனாளியான பாஸ்கர ராஜா மீது வேகமாக மோதியது. இதில், மாற்றுத்திறனாளி பாஸ்கர் ராஜா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ரோடு ரோலர் டிரைவரான வெங்கடேசன் (வயது 21) என்பவரை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக ஒப்பந்ததாரரிடம் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மாநகராட்சி, 127-வது வார்டு உதவி என்ஜினீயர் வீரராகவனை பணியிடை நீக்கம் செய்து உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தையும் ரத்து செய்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. ஒப்பந்த விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அவர் எந்தவித சாலைப் பணிகளும் மேற்கொள்ளக்கூடாது எனவும் சென்னை மாநகராட்சி அதிரடியாக முடிவெடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications