சென்னை நிலம்.. 37 வருடம் கழித்து ஸ்ரீதேவி குடும்பத்தினருக்கு சிக்கல்.. ஐகோர்ட் தீர்ப்பால் தீர்ந்தது
சென்னை: மறைந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த 1988-ம் ஆண்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 2.7 ஏக்கர் நிலத்தை, சம்பந்த முதலியார் என்பவரது குடும்பத்தினரிடம் இருந்து விலைக்கு வாங்கியிருந்தார். அந்த நிலத்தில் பங்கு கேட்டு சம்பந்த முதலியார் மகன் சந்திரசேகரனின் 2-வது மனைவியின் மகன் நடராஜன் மற்றும் மகள் சிவகாமி ஆகியோர் அந்த சொத்துக்கு உரிமை கோரியும், சொத்தில் பங்கு கேட்டும் செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவி, 1988-ம் ஆண்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 2.7 ஏக்கர் நிலத்தை, சம்பந்த முதலியார் என்பவரின் குடும்பத்தினரிடம் இருந்து வாங்கியுள்ளார். கடந்த 37 ஆண்டுகளாக சொத்தை அனுபவித்து வந்தனர். இதில் சம்பந்த முதலியாரின் மகன் சந்திரசேகரன் முதலியாரின் இரண்டாவது மனைவியின் மகன் நடராஜன், மகள் சிவகாமி ஆகியோர் வாரிசு சான்றிதழ் பெற்று, சொத்து விற்பனையை செல்லாது என அறிவிக்கக் கோரியும், சொத்தில் பங்கு கோரியும் செங்கல்பட்டு கோர்ட்டில் உரிமையியல் வழக்கு தொடர்ந்தார்கள். சுமார் 38 ஆண்டுகள் கழித்து சொத்து விற்பனை செல்லாது என்று அறிவிக்க கோரியிருந்தனர்.

எனினும் இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர், அவரது மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இதை விசாரித்த செங்கல்பட்டு நீதிமன்றம், முழுமையான விசாரணைக்குப் பிறகே சொத்தின் உரிமை குறித்து முடிவெடுக்க முடியும் என்று கூறி போனி கபூர் மற்றும் அவரது மகள்களின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து போனிகபூர், ஜான்வி கபூர், குஷி கபூர் கூட்டாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், 'அந்த சொத்தை சட்டப்படி விலைக்கு வாங்கி அனுபவித்து வரும் நிலையில் போலி வாரிசு சான்றிதழ் மூலமாக 37 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சிலர் உரிமை கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர். எனவே, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை நிராகரிக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்திருந்தனர்
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.வி. தமிழ்செல்வி, "ஏற்கெனவே ஸ்ரீதேவியின் குடும்பத்தாருக்கு எதிராக இந்த சொத்தில் பங்கு கேட்டு நடராஜன் மற்றும் சிவகாமி ஆகியோர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆனால், அவர்கள் சொத்தை அபகரிக்கும் நோக்கில் செங்கல்பட்டு நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருப்பது ஏற்புடையது கிடையாது. எனவே ஸ்ரீதேவி குடும்பத்தார் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன். அத்துடன் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஸ்ரீதேவி குடும்பத்தினருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள உரிமையியல் வழக்கையும் நிராகரிக்கிறேன்" என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.














Click it and Unblock the Notifications