அதிர்ச்சி.. விஷவாயு தாக்கியதால் அடுத்தடுத்து மயங்கிய தொழிலாளிகள்! ஒருவர் பலி.. மற்றவருக்கு சிகிச்சை
சென்னை: வடசென்னை மாதவரத்தில் பாதாள சாக்கடையை அடைப்பை சரிசெய்தபோது விஷ வாயு தாக்கி 26 வயது தொழிலாளி ஒருவர் பலியானார். இன்னொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நெல்சன் (வயது 26). இவர் சென்னையில் மாதனான்குப்பத்தில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தார். இவர் ஜெட்ராட் இயந்திரம் மூலம் பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் வடசென்னை மாதவரம் முத்துமாரியம்மன் கோவில் தெருவில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அடைப்பை ஜெட்ராட் இயந்திரம் மூலம் சரிசெய்ய முடிவு செய்யப்பட்டது.
தாறுமாறாக சுற்றிய ஒஎன்ஜிசி ஹெலிகாப்டர்.. கட்டுப்பாட்டை இழந்து அரபிக் கடலில் நொறுங்கியது.. 4 பேர் பலி
விஷவாயு தாக்குதல்
இதையடுத்து பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்ய நெல்சன் (26), ரவிக்குமார் (40) ஆகியோர் ஜெட்ராட் இயந்திரத்துடன் சென்றனர். அப்போது நெல்சன் பாதாள சாக்கடை மூடியை திறந்து உள்ளே எட்டிபார்த்ததாக கூறப்படுகிறது. அப்போது பாதள சாக்கடையில் இருந்து விஷவாயு கசிந்ததாக கூறப்படுகிறது.
அடுத்தடுத்து விழுந்த தொழிலாளிகள்
இதனால் அவர் மயங்கி பாதள சாக்கடையின் உள்ளே விழுந்தார். இதை பார்த்த ரவிக்குமார் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவரை காப்பாற்றும் முனைப்பில் அவரும் பாதாள சாக்கடையை எட்டிப்பார்த்தார். அப்போது விஷவாயு அவரையும் தாக்கியது. இதனால் அவரும் பாதாள சாக்கடை கால்வாயின் உள்ளே விழுந்தார். இதை பார்த்தவர்கள் உடனே மாதவரம் காவல் துறைக்கும், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தொழிலாளி பலி
இதையடுத்து விரைந்து வந்த மாதவரம் தீயணைப்பு துறை வீரர்கள் உரிய பாதுகாப்புடன் இருவரையும் மீட்க முயன்றனர். இதில் நெல்சன் சடலமாக மீட்கப்பட்டார். ரவிக்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். இதையடுத்து ரவிக்குமார் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் நெல்சனின் உடல் பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
போலீஸ் விசாரணை
இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொளத்தூர் துணை ஆணையாளர் ராஜாராம் மற்றும் உதவி கமிஷனர் ஆதிமூலம் மற்றும் போலீசார் பார்வையிட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த சம்பவம் மாதவரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.