குட் நியூஸ்.. சென்னைக்கு வருகிறது தென்கொரிய கில்லி கியா மோட்டார்ஸ்.. ஆந்திராவிலிருந்து மாற்ற முடிவு!
ஆந்திராவில் செயல்பட்டு வரும் பிரபல கியா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் தமிழகத்திற்கு தனது தொழிற்சாலையை மாற்ற இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
Recommended Video
சென்னை: ஆந்திராவில் செயல்பட்டு வரும் பிரபல கியா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் தமிழகத்திற்கு தனது தொழிற்சாலையை மாற்ற இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
இந்தியாவில் சில நகரங்கள் அந்த நகரத்தின் தொழிலை வைத்து பிரபலம் அடைந்து இருக்கும். உதாரணமாக மும்பையை இந்தியாவின் பொருளாதார தலைநகர் என்று கூறுவார்கள். பெங்களூரை இந்தியாவின் சிலிக்கான் சிட்டி என்பார்கள்.
அதேபோல்தான் அதிகமாக ஆட்டோமொபைல் நிறுவனங்களின் தொழிற்சாலைகளை கொண்டு இருக்கும் சென்னையை இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைத்து வருகிறார்கள். சென்னையின் உள்ளேயும், சென்னையை விட்டு வெளியே செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலும் செல்லும் போது நீங்கள் வரிசையாக ஆட்டோமொபைல் நிறுவனங்களை பார்த்து இருக்கலாம். சென்னையின் பொருளாதார வளர்ச்சிக்கு இதுதான் மிக முக்கியமான காரணமாக இருந்தது.

ஆனால் ஆந்திரா
ஆனால் சென்னைக்கு இத்தனை சிறப்பு இருந்தும் உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான கியா நிறுவனம் சென்னையில் தனது தொழிற்சாலையை தொடங்கவில்லை. தென் கொரியாவை சேர்ந்த இந்த நிறுவனத்திற்கு இந்தியாவில் ஒரே தொழிற்சாலைதான் உள்ளது. ஆந்திராவின் அடாடகுள்ளபள்ளி பகுதியில் இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. கியாவின் மிகப்பெரிய தொழிற்சாலைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

என்ன காரணம்
முதலில் இந்த கியா மோட்டார்ஸ் தொழிற்சாலை சென்னையில் தொடங்கப்படுவதாகவே இருந்தது. ஆனால் அப்போது 3 வருடங்களுக்கு முன் தமிழகத்தில் அரசியல் சூழ்நிலை சரியாக இல்லை. தமிழக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பு காரணமாக இந்த ஒப்பந்தம் போடுவதில் குழப்பம் ஏற்பட்டது. இதை ஆந்திர அரசு பயன்படுத்திக் கொண்டது. இதனால் ஆந்திராவில் இந்த கியா மோட்டார்ஸ் தொழிற்சாலை அமைக்கப்பட்டது.

வேலைகள்
கியா மோட்டார்ஸ் தொழிற்சாலை காரணமாக ஆந்திராவில் மொத்தம் 12 ஆயிரம் பேர் நேரடியாக வேலை வாய்ப்பு பெற்று இருக்கிறார்கள். ஒரு வருடத்திற்கு இங்கு 3 லட்சம் கார்கள் தயார் செய்யப்படுகிறது. இதனால் ஆந்திராவின் பொருளாதாரம் பெரிய அளவில் உயர்ந்துள்ளது. அதேபோல் இந்த கியா மோட்டார்ஸ் தொழிற்சாலையின் மதிப்பு 1.1 பில்லியன் டாலர் ஆகும். இது பெரிய அளவில் லாபத்தை அளித்து வருகிறது .

மீண்டும் வருகிறது
இந்த நிலையில் இந்த தொழிற்சாலையை தமிழகத்திற்கு மாற்ற கியா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம். தங்களுடைய பார்ட்னர் நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம் மூலம் இந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சென்னையில் ஹூண்டாய் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அவர்கள் மூலம் தமிழக அரசு அதிகாரிகளிடம் இவர்கள் பேசி வருகிறார்கள்.

வர காரணமும்
கியா மோட்டார்ஸ் தொழிற்சாலையின் இந்த முடிவிற்கு நிறைய காரணம் உள்ளது. அதன்படி ஆந்திராவில் உள்ளூர் மாநில மக்களை வேலைக்கு வைக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல் அங்கு போதுமான அளவில் ஊழியர்கள் கிடைக்கவில்லை. அரசு போதுமான அளவு சலுகைகள் வழங்கவில்லை. இதுவும் அவர்களுக்கு பெரிய அளவில் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின், மூன்று தலைநகர் கொள்கை, கியா மோட்டார்ஸ் தொழிற்சாலைக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் நல்லது
இதனால் கியா மோட்டார்ஸ் தொழிற்சாலை பெரிய அளவில் இழப்பை சந்திக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே அருகில் இருக்கும் தமிழகம் சிறந்தது என்று முடிவு செய்துள்ளனர் . தற்போது தமிழகத்தில் அரசியல் குழப்பம் இல்லை, முதலீடுகள் பெருகி வருகிறது. இதனால் தமிழகத்திற்கு கியா மோட்டார்ஸ் தொழிற்சாலையை மாற்றி விடலாம் என்று முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே இங்கு செயல்பட்டு வரும் வேறு ஒரு பழைய நிறுவன தொழிற்சாலையை வாங்கி அதை புதுப்பிக்க முடிவு செய்துள்ளனராம்.

பதில் அளி க்கவில்லை
இது தொடர்பாக முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கியா மோட்டார்ஸ் தொழிற்சாலை அதிகாரிகள் இது தொடர்பாக பதில் அளிக்க மறுத்துவிட்டனர். இப்போது இதில் நாங்கள் கருத்து தெரிவிக்க முடியாது என்று கூறிவிட்டனர். அதேபோல் ஆந்திர பிரதேச அரசு தரப்பும் இதில் கருத்து தெரிவிக்கவில்லை. தமிழக அதிகாரிகள் சிலர் பேச்சுவார்த்தை நடப்பது உண்மைதான். விரைவில் நல்ல செய்தி வரும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications