50 கிமீ வேகத்தில் மிரட்டும் புயல் காற்று.. அடுத்த 3 நாட்களுக்கு 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்!
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் 28ம் தேதி வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தின் கடலோரப் பகுதியில் லேசான காற்று சுழற்சி ஏற்பட்டுள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி, சென்னையில் நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
இதனால், சாலைகளில் நடந்து செல்வோர் கடும் சிரமத்தை சந்தித்தனர். பள்ளத்தில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே இயக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். அலுவலகத்துக்கு செல்வோர் மழை காரணமாக சிரமங்களை சந்தித்தனர். இந்நிலையில் நேற்று போல் இன்றும் வானம் கருமேகத்துடன் காணப்படுகிறது. இன்றும் கனமழை பெய்ய போகிறது.

9 மாவட்டங்களில் மழை
இதனிடையே வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 நாட்களுக்கு 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் தற்போது பெய்து வரும் வட கிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.

டெல்டாவில் மழை
வெப்பச் சலனம், வளி மண்டலமேலடுக்கில் உருவாகியுள்ள காற்று சுழற்சியால் தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் லேசான மழையும், சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

எங்கெல்லாம் கனமழை
அடுத்த 3 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். உள் மாவட்டங்களில் சில இடங்களிலும் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தீபாவளியில் மழை
சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.. சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் கனமழையும் பெய்யும். புதுச்சேரியை ஒட்டிய கடலோரப் பகுதியில் மணிக்கு 50 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நேரத்தில் பெய்து வரும் கனமழை மக்களின் பயணத்தையும், வியாபரத்தையும் பாதித்துள்ளது. இனி வரப்போகும் மழை, தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தையும் சேர்த்து பாதிக்கப்போகிறது.












Click it and Unblock the Notifications