தென் தமிழகத்தில் கனமழை வெளுக்கும்... சென்னை வானிலை மையமும் சொல்லிடுச்சு
Recommended Video
சென்னை : அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் மிக கனமழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவ மழை நவம்பர் 1 முதல் தொடங்கியுள்ள நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென்தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. தென்தமிழகத்தில் நேற்று பல இடங்களில் மழை வெளுத்துக் கட்டியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கான வானிலை முன்அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது : மாலத்தீவு முதல் தெற்கு கொங்கன் பகுதி வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது நிலவுகிறது. மாலத்தீவு பகுதியில் வளிமண்டலத்தில் மேல்அடுக்கு சுழற்சி நிலவுகிறது, மேலும் அந்தமான் கடல்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் 29 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது, தூத்துக்குடி மாவட்டம் சாத்தன்குளத்தில் 22 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. பாபநாசத்தில் 16 செ.மீ மழையும், திருச்செந்தூரில் 11 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. காட்டுமன்னார்கோவிலில் 9 செ.மீட்டர் மழையும், சீர்காழி, பரங்கிப்பேட்டை, கும்பகோணம், வேதாரண்யம், குளச்சல், ஒட்டப்பிடாரத்தில் 5 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் தென்தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும் வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.
தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் கனமழை வரை பெய்யும், வடதமிழகத்திலும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.