சென்னையில் நடுவழியில் நின்ற மெட்ரோ ரயில்.. சுரங்கப் பாதையில் திக் திக்.. தவித்துபோன பயணிகள்!
சென்னை: சென்னை சென்ட்ரல் - உயர்நீதிமன்றம் இடையே சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் நடுவழியில் நின்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் பாதி வழியில் நின்றதால், சுமார் 20 நிமிடங்கள் பயணிகள் சிக்கி கொண்டனர். இதன் 20 நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மெட்ரோ ரயில் பாதுகாப்பாக பயணத்தை தொடங்கியது.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் உச்சத்தில் இருக்கும் நிலையில், பயணிகளுக்கு வசதியான பயணமாக மெட்ரோ ரயில் பயணம் அமைந்திருக்கிறது. சென்னை விமான நிலையம் முதல் விம்கோ நகர் மற்றும் பரங்கி மலை முதல் சென்ட்ரல் வரை என்று 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக சென்னையில் மெட்ரோ ரயிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நவம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 93 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக பணிக்கு செல்வோர் பலரும், மெட்ரோ ரயிலில் பயணிப்பது அதிகரித்து வருகிறது. தற்போது சென்னையில் மழை அதிகரித்துள்ளதால், அதிகாலையிலேயே மெட்ரோவில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் நோக்கி மெட்ரோ ரயில் சுமார் 20 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது சென்னை சென்ட்ரல் - உயர் நீதிமன்றம் இடையே சுரங்கப் பாதையில் பயணித்த போது திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் நடுவழியில் நின்றது.
மின்சார பிரச்சனை காரணமாக பாதி வழியில் நின்றதால், மெட்ரோ ரயிலுக்குள் இருந்த பயணிகள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 20 நிமிடங்களாக பயணிகள் மெட்ரோ ரயிலுக்குள் சிக்கிக் கொண்டிருந்த நிலையில், பின்னர் பயணிகள் இறக்கப்பட்டு சுரங்கப்பாதை வழியாக பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதன்பின் சுமார் அரைமணி நேரத்திற்கு பின் மெட்ரோ ரயில் இருப்பு பாதையில் இருந்து அகற்றப்பட்டது. இதையடுத்து மெட்ரோ ரயில் சேவை சீரானது. சென்னையில் மெட்ரோ ரயிலின் சுரங்கப் பாதையில் பயணிகள் இறக்கிவிடப்பட்டு வெளியேற்றப்படுவது இதுவே முதல்முறையாகும். இதனால் பலரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications