"சத்தமின்றி நடக்கும் மாற்றம்" கெத்து காட்டும் சென்னை மெட்ரோ! இந்தியாவில் இதுவரை இப்படி நடந்ததே இல்லை
சென்னை: இன்னும் சில ஆண்டுகளில் நம்ம சென்னை மொத்தமாக மாறப் போகிறது. இனி வரும் காலங்களில் மெட்ரோவில் இருந்து இறங்கி, வெளியே சாலையில் கால் வைக்காமலேயே நேரடியாக மால் அல்லது வேலை செய்யும் இடத்திற்கு நம்மால் செல்ல முடியும். சென்னை மெட்ரோ இப்போது இதற்கான பிளானில் தான் இறங்கி இருக்கிறது.
சென்னை மெட்ரோ இப்போது 2 வழித்தடங்களில் இயங்கி வரும் நிலையில், மேற்கொண்டு மூன்று வழித்தடங்களில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இது முடிந்தால் விரிவான மெட்ரோ நெட்வொர்க்கை கொண்ட நகரமாகச் சென்னை மாறும்.

மொத்தமாக மாற போகுது: இதற்கிடையே வரும் காலங்களில் சென்னை மெட்ரோ நிலையங்களுக்கு அருகே உள்ள இடங்கள் மொத்தமாக மாறப் போகிறது. அதாவது மெட்ரோ நிலையங்களைச் சுற்றி இருக்கும் இடங்களில் பெரிய பெரிய ஷாப்பிங் கட்டிடங்கள், வேலை செய்யும் இடங்களைக் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக எட்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. திருமங்கலம், ஆலந்தூர், வடபழனி, கே.கே.நகர், மந்தைவெளி, அண்ணாநகர் மேற்கு, ஆயிரம் விளக்கு, கோயம்பேடு ஆகிய இடங்களில் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல இடங்களில் மெட்ரோ இருந்தாலும், வருவாயை அதிகரிக்க இதுபோன்ற ஒரு திட்டத்தை வேறு எந்த மெட்ரோவும் கையில் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதில் சில இடங்களை மெட்ரோ நிர்வாகம் நேரடியாக டெவலப் செய்யும். அதேநேரம் சில இடங்களை மெட்ரோ நிர்வாகம், எம்டிசி உடன் இணைந்து டெவலப் செய்யும் எனத் தெரிகிறது. மெட்ரோ நிலையங்களில் இருந்து நேரடியாக இந்த கட்டிடங்களுக்குச் செல்லும் வகையில் ஒரு பிரத்தியேக நடைபாதை ஏற்படுத்தப்படுமாம்.
அதிகாரிகள் தகவல்: இது குறித்து மெட்ரோ அதிகாரிகள் கூறுகையில், "முதற்கட்டமாக கோயம்பேடு தவிர மற்ற ஏழு இடங்களில் ஆய்வுப் பணிகளைத் தொடங்கியுள்ளோம்.. கோயம்பேட்டை பொறுத்தவரை தற்போதுள்ள மெட்ரோ நிலையத்திற்கு வெளியே உள்ள இடம், பேருந்து நிலையத்திற்கு அருகில் மிகப்பெரிய இடம் இருக்கிறது. சிஎம்டிஏ மற்றும் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து அதை மிகப் பெரியளவுக்கு டெவலப் செய்யத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்
பிளான் இதுதான்: திருமங்கலம் பகுதியைப் பொறுத்தவரை அங்கே 12 மாடிக் கட்டடத்தைக் கட்ட மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மெட்ரோ ரயில் அந்த ரூட்டில் இயக்கப்படும் போது நேரடியாக மூன்றாவது தளத்தில் ரயில்கள் நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. திருமங்கலம் பகுதியைப் பொறுத்தவரை மேம்பாலம் அருகே இருந்த மூன்று வீடுகளை வாங்கி சிஎம்ஆர்எல் இந்த பணிகளை மேற்கொள்ள உள்ளது.
அண்ணாசாலையில் ஆயிரம் விளக்கு பகுதியில் ஏற்கனவே உள்ள வணிக வளாகத்தை மெட்ரோ நிறுவனம் வாங்கியுள்ளது. அந்த கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்படும். இரண்டாம் கட்ட மெட்ரோவில் ஒயிட்ஸ் சாலையில் நிலத்திற்கு அடியே மெட்ரோ நிலையம் ஒன்று அமைய உள்ள நிலையில், அத்துடன் இந்த கட்டிடம் இணைக்கப்படும்.
மொத்தமாக மாறுது டாஸ்மாக்.. தீபாவளிக்கு பின் மேஜர் மாற்றம்! இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
களத்தில் எம்டிசி: ஆலந்தூரில் மெட்ரோ நிலையத்திற்கு அருகே இருக்கும் இடத்தை டெவலப் செய்யவும் திட்டமிட்டுள்ளனர். மந்தைவெளி மற்றும் அண்ணாநகர் மேற்கு பகுதிகளில் இருக்கும் உள்ள எம்டிசி பஸ் டிப்போக்களை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். இந்த பணிகளுக்குத் தேவையான நிதியை மாநில அரசிடம் கேட்கப்பட்டுள்ளதாக மெட்ரோ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
என்ன காரணம்: அவர் மேலும் கூறுகையில், "வேலை செய்யும் இடங்கள், மால்கள், வீடுகள் என்று மக்கள் கூடும் கட்டிடங்களை மெட்ரோ நிலையங்களுக்கு அருகே அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இது மெட்ரோ ரயிலைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும்.. டிக்கெட் விற்பனையில் கிடைக்கும் வருமானம் என்பது ரயில் முழுமையாக இயங்கினாலும் கூட அன்றாட செலவுகள் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்த போதுமானதாக இருக்காது. இதன் காரணமாகவே ரயில் நிலையங்கள் அருகே உள்ள பகுதிகளை டெவலப் செய்ய முடிவு எடுத்துள்ளோம்.
ரயில் நிலையத்திற்குள் இருக்கும் இடங்களைச் சில்லறை விற்பனை கடைகளுக்கு வாடகைக்கு விடுவது, விளம்பரங்களை வைப்பது போன்ற முறையிலும் வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார். டிக்கெட் கட்டணத்தைத் தவிர மற்ற வழிகளில் வருமானத்தை ஈட்டச் சென்னை மெட்ரோ தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 2021-2022 நிதியாண்டில் இது 34.98 கோடி ரூபாயாக இருந்த நிலையில், கடந்த 2022-2023ஆம் ஆண்டில் இது 57.86யாக அதிகரித்தது. அதாவது ஒரே ஆண்டில் 65% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது..












Click it and Unblock the Notifications