சென்னை மக்களே.. நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.. ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும்!
சென்னை: சுதந்திர தினத்தையொட்டி நாளை (ஆகஸ்ட் 15) ஞாயிறு அட்டவணைப்படி சென்னை மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் முதல் கட்டமாக, 54 கி.மீ தொலைவிற்கு இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமான நிலையம் முதல் விம்கோ நகர் மற்றும் பரங்கிமலை முதல் சென்ட்ரல் என 2 வழித்தடங்களில் தற்போது மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கான பணிகள் 3 வழித்தடங்களில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முடிந்த ஜூலை மாதத்தில் 1,03,78,835 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாகவும், ஜூன் மாதத்தை விட ஜூலை மாதத்தில் 11,58,910 பயணிகள் மெட்ரோ ரயில்களில் அதிகம் பயணித்துள்ளதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் நாளை (ஆகஸ்ட் 15) நாட்டின் 79வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினமான நாளை அரசு விடுமுறை என்பதால், மெட்ரோ ரயிலில் பயணம் செயபவர்களின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் நாளை, ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "சுதந்திர தினத்தையொட்டி, நாளை (ஆகஸ்ட் 15) ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும். காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் நேர இடைவெளிகள் பின்வருமாறு:
நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும், காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணிவரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மேலும் இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications