சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில்.. கன்னியாகுமரி வரை இயக்க வேண்டும்.. மோடிக்கு கோரிக்கை வைத்த ஓபிஎஸ்
சென்னை: சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்த நிலையில், சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலை கன்னியாக்குமரி வரை இயக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு ஓ பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு முதன் முதலாக நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. முதன் முதலாக வந்தே பாரத் ரயில் சேவைகள் டெல்லி - வாரணாசி இடையே இயக்கப்பட்டது. இந்த வந்தே பாரத் ரயில் சேவைக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது.

பல்வேறு சொகுசு வசதிகளை கொண்ட ரயிலாக வந்தே பாரத் ரயில் இருந்ததால், பயணிகளுக்கும் இந்த ரயில் மீதான ஆர்வம் அதிகரித்தது. இதன் காரணமாக அடுத்தடுத்து 25 வந்தே பாரத் ரயில்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டது. தமிழகத்திலும் சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூருக்கும் சென்னையில் இருந்து கோவைக்கும் என 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டன.
இந்த நிலையில், நேற்று பிரதமர் மோடி சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் உள்பட மேலும் 9 வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். அதன்படி தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவான சென்னை நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை நேற்று முதல் தொடங்கியது. பயணிகளும் வந்தே பாரத் ரயிலுக்கு நல்ல வரவேற்பை கொடுத்தனர். இந்த நிலையில், தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீ செல்வம் சென்னையில் இருந்து நெல்லை வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலை கன்னியாக்குமரி வரை இயக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஓ பன்னீர் செல்வம் கூறியிருப்பதாவது:- சென்னை - திருநெல்வேலி மற்றும் சென்னை - விஜயவாடா உள்பட 9 வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்ததமைக்காக நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு 12 மணி நேரம் வரை பயண நேரமாக இருக்கும் நிலையில், வந்தே பாரத் ரயில் மூலம் பயண நேரம் 8 மணி நேரமாக குறைவது தென் மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எனினும், இந்த ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்பது தென் மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது. ஆகவே, வந்தே பாரத் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க தேவையான அறிவுறுத்தல்களை ரயில்வே அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும் என்று நான் கோரிக்கை விடுக்கிறேன்" என தெரிவித்துள்ளார். வந்தே பாரத் ரயிலில் ஒரு பெட்டியில் 2 எல்இடி டிவிகள், தானியங்கி கதவுகள், வைஃபை வசதிகள், பயோ டாய்லட்டுகள் என வசதிகள் உள்ளனர். மொத்தம் 8 பெட்டிகள் கொண்டதாக நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications