சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில்.. கோவில்பட்டி பயணிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்! ரயில்வே குட் நியூஸ்
சென்னை: சென்னை - நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு சமீபத்தில் பெட்டிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்ட நிலையில் தற்போது கோவில்பட்டி பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கைக்கு ரயில்வே அனுமதி வழங்கி உள்ளது.
வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதனால் மேலும் பல இடங்களில் வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே முடிவு செய்து வருகிறது.

பயணிகள் வரவேற்பு
வந்தே பாரத் ரயில்களில் சொகுசு வசதிகள், வேகமான பயணம், ரயில்களில் முழுவதும் ஏசி வசதி, சொகுசு இருக்கைகள், தானியங்கி கதவு என பல வசதிகள் உள்ளன. தமிழகத்திலும் சென்னை - பெங்களூர், சென்னை - நெல்லை என பல வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் சென்னை டூ நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது.
கோவில்பட்டியில் நின்று செல்லும்
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பயணிகள் எண்ணிக்கை காரணமாக இந்த ரயிலில் கூடுதல் பெட்டிகளும் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நீண்ட நாட்களாக பயணிகள் வைத்து வந்த கோரிக்கை ஒன்றை தெற்கு ரயில்வே பூர்த்தி செய்துள்ளது. அதாவது நெல்லை டூ சென்னை மற்றும் சென்னை டூ நெல்லை இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் இனி கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
விரைவில் ஒப்புதல்
கோவில்பட்டியில் நிறுத்த அனுமதி வழங்க வேண்டும் என பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்த நிலையில், இந்த கோரிக்கையினை ஆய்வு செய்த ரயில்வே வாரியம், சென்னை எழும்பூர் - நெல்லை வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இதற்கான, அறிவிப்பினை விரைவில் தெற்கு ரயில்வே விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலானது கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலும் விரைவில் கோவில்பட்டியில் நின்று செல்லும் என ரயில்வே அறிவித்து இருப்பது பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
வந்தே பாரத் ரயில்
கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு 8 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில் இருமார்க்கமாகவும் இயக்கப்பட்டது. இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது. ஆனால் முதலில் 8 பெட்டிகளோடு மட்டுமே இயக்கப்பட்டதால், கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர்.
பலருக்கும் டிக்கெட் கிடைப்பதில்லை என புகார்களும் வந்தன. இதையடுத்து கூடுதலாக மேலும் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு 16 பெட்டிகளுடன் சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வண்டி எண் 20665 / 20666 ஆகிய எண்களில் இயக்கப்பட்டு வரும் இந்த ரயிலானது 7 மணி 50 நிமிடங்களில் சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்து சேர்ந்து விடுகிறது.












Click it and Unblock the Notifications