பாலியல் புகார்- சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் சஸ்பெண்ட்
சென்னை: மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
சென்னை கே.கே.நகரில் பத்ம சேஷாத்ரி பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி அறக்கட்டளை உறுப்பினர்களில் ஒருவராக நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளார்.
இப்பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீது மாணவிகள் பாலியல் தொல்லை புகார் கொடுத்தனர். ஆன்லைன் வகுப்புகளிலும் கூட ஆபாசமாக ராஜகோபாலன் நடந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இதனையடுத்து ஆசிரியர் ராஜகோபாலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். மேலும் ஆசிரியர் ராஜகோபாலனை பாதுகாக்க நினைத்தால் பத்ம சேஷாத்ரி பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

ஒய்ஜி மகேந்திரன் குடும்பம் விளக்கம்
இந்நிலையில் பத்ம சேஷாத்ரி பள்ளியின் அறக்கட்டளை உறுப்பினரான நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன், அவரது மகள் பாஜகவின் மதுவந்தி உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் அடுத்தடுத்து விளக்கம் தந்து கொண்டே இருந்தனர். புகாரில் சிக்கிய ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர்கள் உறுதி அளித்திருந்தனர்.

பள்ளியில் விசாரணை
இதனிடையே சென்னை .கே.கே.நகர் போலீசாரும் பத்ம சேஷாத்ரி பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். அதேபோல் குழந்தைகள் நல அலுவலரும் இந்த பள்ளியில் விசாரணை நடத்தி இருந்தார். தமிழக அமைச்சர் அன்பில் மகேஷும், இப்புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

சர்ச்சை ஆசிரியர் சஸ்பெண்ட்
தற்போது பாலியல் புகாருக்கு உள்ளான பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் சஸ்பெண்ட் (பணியிடை நீக்கம்) செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜகோபாலன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications