சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ்
சென்னை: சென்னையில் புதிய பிரீமியம் ஏசி பஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. தங்க ரதம் என்று சொல்லும் அளவுக்கு பள பளவென இந்த பஸ் காட்சி அளிக்கிறது. இந்த பேருந்து சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டு ஓரிரு வாரங்களே ஆகியுள்ள நிலையில், பயணிகள் சிலர் பொறுப்பற்ற தன்மையுடன் பேருந்தில் நடந்து கொள்வதாக பலரும் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
சென்னையில் பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் புதிய பிரீமியம் ஏசி பஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பஸ் சேவைகள் சென்னை சிறுசேரி - கோயம்பேடு, மற்றும் திருவான்மியூர் - கிளாம்பக்கம் (வழித்தடம் 91) வழியில் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் தங்க நிற பஸ்
பேருந்தின் வெளிப்புறத்தில் கோல்டன் கலருடன் கொண்ட இந்த பஸ் பார்ப்பதற்கு தங்கம் போல மின்னியதால் தங்க ரதம் என்றே என சென்னை வாசிகள் சொல்லும் அளவிற்கு சென்னை சாலைகளில் பள பளவென்று இந்த பேருந்துகள் தினமும் சென்று வருவதை பார்க்க முடியும். முழுவதும் ஏசி வசதி, வைஃபை வசதி, மொபைல் சார்ஜிங் வசதி இந்த பேருந்துகளில் உள்ளன.
அடுத்த பேருந்து நிலையம் பற்றி தெரிந்து கொள்ள டிஜிட்டல் போர்டு, சொகுசான இருக்கைகள் என முழுவதும் உயரதர வசதி கொண்டதக இந்த பேருந்து உள்ளது. நடத்துநர் இல்லாத இந்த பேருந்து சேவைக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பும் கிடைத்தது. பயணிகள் சென்னை ஒன் செயலி வழியாக முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து இதில் பயணிக்க முடியும் வகையில் வசதி செய்யப்பட்டிருந்தது.
செருப்பை கழற்றிவிட்டு
இந்த பேருந்து அறிமுகம் செய்யப்பட்டு ஓரிரு வாரங்களே ஆகியுள்ள நிலையில், பயணிகள் சிலர் பொறுப்பற்ற தன்மையுடன் பேருந்தில் நடந்து கொள்வதாக பலரும் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பயணி ஒருவர் தனது ஆதங்கத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் சக பயணிகள் சிலர் எதிரே உள்ள இருக்கையில் கால்களை வைத்து, கொஞ்சம் கூட பொறுப்புணர்வு இன்றி இருக்கும் போட்டோக்களையும் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், பேருந்தில் பயணம் செய்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது செருப்பை கழற்றிவிட்டுவிட்டு, எதிரே இருந்த குஷைன் இருக்கையில் காலை வைத்து பயணித்து கொண்டு இருந்தார். சிறிது நேரத்தில், கல்லூரி மாணவர் ஒருவரும் இதே மாதிரி நடந்து கொண்டார். வேறுபட்ட தலைமுறைகள் ஆனாலும் பொதுநாகரீகம் என்பது இருவருக்கும் ஒரே மாதிரியாக உள்ளது.
நெட்டிசன்கள் ஆதங்கம்
இதுபோன்ற அழகான விஷயங்கள் (பேருந்துகள்) நாம் தகுதியற்றவர்கள். பிரீமியம் பஸ் சேவையை அனுபவிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் முடிந்த வரை சீக்கிரமாக பயணித்துவிடுங்கள். பயணிகள் இந்த பேருந்தை சிதைத்து போடுவதற்கு முன்பாக பயணிப்பது நல்லது என்றாவாறு தனது பதிவை முடித்துள்ளார். இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்கள் ஆதங்கத்தை கொட்டியுள்ளனர்.
புறநகர் மின்சார ரயில்களில் பக்கத்திலேயே பயணிகள் இருந்தாலும் கூட எதிரே உள்ள இருக்கைகாலியாக இருந்தால் அதில் காலை வைத்து பயணிக்கும் பலரையும் தினமும் காணலாம். இப்படியான சமூகத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். மக்களுக்கு கொஞ்சம் பொறுபுபுடனும் சிவிக் சென்சுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.
போக்குவரத்து கழகம் விளக்கம்
மேற்கூறிய விவகாரம் தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் குறிப்பிட்ட அந்த பதிவு குறித்து கூறும் போது, பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியத்திற்கும் ஏமாற்றத்திற்கும் எங்களின் மனமார்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம். எம்.டி.சி (MTC) நிறுவனத்தின் பிரீமியம் சேவைகள், அனைத்து பயணிகளுக்கும் வசதியான மற்றும் தரமான பயண அனுபவத்தை வழங்கும் நோக்கில் அறிமுகப்படுத்தட்டது ஆகும்.
சுத்தம் மற்றும் வசதிகளின் சரியான பயன்பாட்டை பராமரிப்பது அனைவரின் கூட்டு பொறுப்பாகும். இதுபோன்ற நடத்தையை ஏற்றுக்கொள்ளமுடியாது. இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், பேருந்து ஊழியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளிடையே விழிப்புணர்வை அதிகரித்து, கடுமையான கண்காணிப்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
மேலும், இந்த பேருந்துகளின் தரத்தை காக்கும் விதமாக வழிகாட்டுதல்களை வலுப்படுத்த உள்ளோம். இந்த சேவைகளை அனைவருக்கும் பயனுள்ளதாக பராமரிக்க, அனைத்து பயணிகளின் ஒத்துழைப்பையும் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications