மகளிடமே பாலியல் வன்கொடுமை! கொடூர தந்தையை தூக்கிலிட உத்தரவிட்ட சென்னை போக்சோ நீதிமன்றம்
சென்னை: பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தந்தைக்கு தூக்குத் தண்டனை விதித்த சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம், உடந்தையாக இருந்த தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்து இருக்கிறது.
சென்னை கிண்டியை சேர்ந்தவர் சூரியன். இவரது மனைவி மாதவி. இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.
இந்த நிலையில், தனது தந்தை சூரியன் தன்னை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்வதாக அவரது மகள் பகீர் புகாரை கூறினார்.

உறைய வைத்த கொடூரம்
இது தொடர்பாக செஸ் சைல்டு லயன் குழு உறுப்பினர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் அடிப்படையில் கிண்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தந்தை சூரியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் கூடுதல் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி தெரிவித்த தகவல்கள் விசாரணை நடத்திய போலீசாரை அதிர்ச்சியில் உறைய வைத்தன.

தாய் கொலை மிரட்டல்
பாதிக்கப்பட்ட சிறுமியை ஏழு வயதில் இருந்து பதினைந்து வயது வரை தந்தை சூரியன் பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார். இதனால் கடந்த 2019 ஆம் ஆண்டு சிறுமி கர்ப்பம் அடைந்து உள்ளார். இந்த தகவலை தனது தாய் மாதவியிடம் சிறுமி தெரிவித்தபோது அவர் கருவை கலைத்து உள்ளார். இந்த சம்பவம் குறித்து வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

நிரூபணமான குற்றம்
இதையடுத்து, சிறுமியின் தந்தை சூரியன் மற்றும் தாய் மாதவி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி அமர்வு முன்பு நடந்து வந்தது. அப்போது வழக்கில் சிறுமியின் தாய் மற்றும் தந்தைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி காவல்துறை தரப்பில் நிரூபிக்கப்பட்டது.

தந்தைக்கு தூக்கு, தாய்க்கு ஆயுள்
இதனை இன்று இந்த வழக்கின் தீர்ப்பை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் வெளியிட்டது. முதல் குற்றவாளியான தந்தை சூரியனுக்கு தூக்கு தண்டனை விதித்துக்கப்பட்டது. குற்றத்துக்கு உடந்தையாக இருந்த தாய் மாதவிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி ரூ.10,000 அபராதமும் செலுத்த வேண்டும் எனவும் தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications