கால்களில் கட்டுகளுடன் யாசகம்.. இரவில் ஒய்யார நடை.. சென்னைக்குள் புகுந்த 20 பேர்! குவியும் புகார்கள்!
சென்னை: சென்னையில் போக்குவரத்து சிக்னல்கள் அருகே போலியான கட்டுகளை போட்டுக் கொண்டு யாசகம் கேட்போர் வேடத்தில் இருந்த திருடர்களை சென்னை போலீஸார் கைது செய்தனர்.
போரூர், வடபழனி, அடையாறு ஆகிய பகுதிகளில் பிச்சைக்காரர்களின் வேடத்தில் போலியான கட்டுக்கை கட்டிக் கொண்டு 20 பேர் சுற்றி வருவதாக போலீஸாருக்கு புகார்கள் எழுந்தன.
இதையடுத்து அவர்களை பிடிக்க உதவி ஆணையர் ராஜீவ் பிரின்ஸ் ஆரான் தலைமையில் குழு அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அந்த நபர்கள் திருட்டு குற்றங்களிலும் ஈடுபடுவதாகவும் தகவல்கள் கிடைத்தன.

போலி
போலியாக கட்டு போட்டுக் கொண்டு அவர்கள் வலம் வருவதாகவும் புகார் மக்கள் புகார் கூறினர். அது போல் சாலையோரத்தில் வசித்து வந்த ஒரு பெண்ணிடம் அந்த கும்பல் பிச்சைக்காரர்கள் போல் நடித்து கடந்த வாரம் ரூ 20 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றதாக புகார் கொடுத்தார்.

காலை நேரத்தில் கட்டு
அதிலும் இந்த பிச்சைக்காரர்கள் காலை நேரத்தில் மட்டுமே கட்டுக் கட்டி கொண்டிருப்பதாகவும் இரவு நேரங்களில் கட்டை பிரித்து விடுவதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து போரூர் சிக்னலில் போலீஸார் போய் நின்றனர். அப்போது அங்கு யாசகர் வேடத்தில் கால்களில் கட்டுகளுடன் தாங்கி தாங்கி நடந்து சென்றார். அவரை போலீஸார் நிறுத்தி விசாரித்தனர்.

காலில் என்ன கட்டு
அப்போது அவர் மீது சந்தேகத்தின் பேரில் காலில் என்ன கட்டு என கேட்டனர். அதற்கு அந்த நபர் காலில் அடிபட்டு விட்டதாக தெரிவித்தார். எனினும் நம்பாத போலீஸார் கட்டை பிரித்து காட்டுமாறு கூறினர். அப்போது கட்டை அந்த நபர் பிரித்து காட்டினார். அப்போது அங்கு காயம் ஏதுமில்லை. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

விசாரணை
அவரிடம் விசாரணை நடத்தியதில் அந்த நபரது உறவினர்கள் 20 பேர் பிச்சை எடுக்கும் தொழிலில் போலியாக ஈடுபட்டதாக தெரிவித்தார். அவர்கள் மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என கூறினார். இவர்கள் காலையில் பிச்சை எடுக்கும் தொழிலில் இரவு நேரத்தில் திருட்டுத் தொழிலிலும் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

விபத்தில் காயம்
இவர்கள் பொதுமக்களிடம் தங்கள் கால்கள், விபத்தில் காயமடைந்ததாகவும் இழந்ததாகவும் பொய் கூறி இவர்கள் மீது மக்களுக்கு பரிதாபம் ஏற்படும் வகையில் நடந்து கொள்வதால் மக்களும் அவர்களுக்கு பணம் கொடுத்துவிட்டு செல்கிறார்கள். இவர்களை பிடிக்க போலீஸார் தீவிரம் காட்டி வருகிறார்கள். கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி பிச்சைக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கையை போலீஸார் எடுத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications